Also Watch
Read this
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழந்தார். சட்ட விரோத மது விற்பனை புகாரில் அழைத்துச் சென்று, காவலர்கள் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தலையில் கட்டுடன் விசாரணை கைதி வாக்குமூலம்
தென்பாகம் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞர் அருணாச்சலம் பேசிய கடைசி வீடியோ வெளியானது. தலையில் கட்டுடன் அருணாச்சலம் அளித்த வாக்குமூலத்தின் அதிர்ச்சி காட்சி வெளியானது. அருணாச்சலம் மரணத்திற்கு நீதி வேண்டும் என உறவினர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். உடலை வாங்க மறுத்து போராடி வருவதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
லாக்கப் மரணம் இல்லை - காவல்துறை
விசாரணைக் கைதி அருணாச்சலம் லாக்கப் மரணம் இல்லை என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். விசாரணையின் போது மயங்கி விழுந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல் கூறி உள்ளனர். இந்நிலையில், அருணாச்சலத்தை தென்பாக போலீசார் விசாரித்ததன் வீடியோ காட்சி வெளியானது. மது பாட்டில்களை பறிமுதல் செய்து சோதனையில் ஈடுபட்டதன் காட்சியும் வெளியாகி உள்ளது.
போலீசார் சோதனை செய்த வீடியோ
தூத்துக்குடி காவல் துறையினர் தாக்கியதால் அருணாச்சலம் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அருணாச்சலத்தை சோதனை செய்யும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது?
தூத்துக்குடி, அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம், தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதை தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் அருணாச்சலத்தை 120 மது பாட்டிலுடன் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காவல்துறை தகவல்
நன்றாக இருந்த அருணாச்சலம், அப்போது திடீரென்று வலிப்பு வந்து காவல் நிலையத்தில் கீழே விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் அவருக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது தாய் மூலம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அருணாச்சலம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காவலர்கள் தாக்கியதாக புகார்
இதைத் தொடர்ந்து, அருணாச்சலத்தின் குடும்பத்தினர், சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக அவரை கைது செய்து அழைத்துச் சென்ற தென்பாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 காவலர்கள், கடுமையாக தாக்கியதால் தான் அவரது உடலில் காயம் ஏற்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் எனக் கூறி உள்ளனர். காவல்துறையினர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அருணாச்சலத்தை தாக்கிய நான்கு காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்ட அருணாச்சலத்தின் உறவினர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்து உள்ளனர்.