Also Watch
Read this
ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விறகு வெட்டும் தொழிலாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஐந்து சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அடுத்துள்ள மருதிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் 49 வயதான சந்திரன், விறகுவெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் அந்த பகுதிகளை சேர்ந்த 9 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளை திண்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்தும், வீடியோ கேம் விளையாடுவதுபோல அழைத்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

விசாரணையில் அதிர்ச்சி
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அப்போது, இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர் இதேபோல் மேலும் நான்கு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சந்திரன், சிறையிலேயே இருந்து வருகிறார்.

போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு
இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலெட்சுமி ஆஜரானார். வழக்கை விசாரனை செய்த போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு மரண தண்டனை விதித்தும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 7 லட்சம் என மொத்தம் 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு, தீர்ப்பளித்தார்.