Also Watch
Read this

மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. செல்லூர் கண்மாயில் தேக்கி வைத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

கள்ளழகர் வைபவம்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, வைகை அணையிலிருந்து இன்று ஏப்ரல் 24ஆம் தேதி காலை நீர் திறந்து விடப்பட்டது. மதுரையில் உலகப் புகழ்பெற்ற சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
மே ஒன்றாம் தேதி...
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் மே ஒன்றாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், வைகை ஆற்றில் போதுமான நீர் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் நீர் வளத்துறை அரசாணையின்படி வைகை அணையிலிருந்து ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 29 வரை மொத்தம் 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

வைகையில் இருந்து நீர் திறப்பு
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 33.92 அடியாக உள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காகவும், மதுரை மாநகரின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்காகவும் இன்று காலை 6 மணிக்கு முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து சீறிப்பாயும் இந்த நீர், இணைப்பு கால்வாய் வழியாக வைகை ஆற்றைச் சென்றடையும்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திறக்கப்பட்ட நீரானது தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்கள் வழியாகப் பாயும். எனவே, கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பொது மக்கள் யாரும் இறங்கவோ, குளிக்கவோ அல்லது கால்நடைகளை அழைத்துச் செல்லவோ வேண்டாம் என வைகை அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved