Also Watch
Read this
By: Fyrose Banu

செங்கல்பட்டு அருகே 100 நாள் வேலை சரியாக வழங்கப்படவில்லை என முறையிட்ட கிராம மக்களை, சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டிடங்கள் திறப்பு
செங்கல்பட்டு நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
MLA காரை முற்றுகையிட்ட மக்கள்
அந்த வகையில் செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையத்தைத் திறந்துவிட்டு எம்.எல்.ஏ புறப்படத் தயாரானார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திடீரென செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வந்த காரை சூழ்ந்து முற்றுகையிட்டனர்.
என்கிட்ட கத்தாதீங்க என்று காட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தில் தங்களுக்கு முறையாக வேலை வழங்கப்படுவதில்லை எனவும் மாதம் முழுவதும் வேலை வழங்கப்படாமல், வெறும் 6 நாட்கள் மட்டுமே வேலை ஒதுக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆவேசமாக முறையிட்டனர். மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன், பொதுமக்களிடம் கனிவாகப் பேசுவதற்குப் பதிலாக, தனது ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டும் தோணியில் பேசினார். என்கிட்ட கத்தாதீங்க என்று காட்டமாகக் கூறிய அவர், 100 நாள் வேலை மோடி கொடுப்பது அதற்காக நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம் விரைவில் முழுமையாகக் கிடைக்கும் எனப் பதிலளித்தார்.

மின்னல் வேகத்தில் காரில் புறப்பட்ட MLA
பதிலைக் கூறி முடித்த அடுத்த வினாடியே எம்.எல்.ஏ தனது காரில் மின்னல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார். தங்கள் குறைகளைக் கேட்க வந்த மக்கள் பிரதிநிதி பொதுமக்களை விரல் நீட்டி எச்சரித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

மிரட்டும் அதிகாரம் யார் கொடுத்தது?
விரல் நீட்டி மிரட்டும் அதிகாரம் வாக்களித்த மக்களின் விரல் நுனியில் தான் இருக்கிறது என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்துவிடக் கூடாது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved