Also Watch
Read this
By: Fyrose Banu

கருநீலம் அடுத்த கொண்டாங்கி ஊராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை முறையான பராமரிப்பு இன்றி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப்
கொண்டாங்கி பகுதியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் பேருந்துக்காக காத்திருக்க அமைக்கப்பட்ட ஒரே நிழற்குடை தற்போது சிதிலமடைந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.
மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்
பயணிகள் அமர வேண்டிய இந்த நிழற்குடை தற்போது மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அங்கேயே அமர்ந்து மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே உடைத்துச் செல்வதால் கண்ணாடித் துகள்கள் சிதறிக்கிடக்கின்றனஇதனால் பயணிகள் உள்ளே நுழையக்கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் இந்த இடத்தைக் கடந்து செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. 
சிதிலமடைந்த நிழற்குடை
மழையிலும் வெயிலிலும் நிழற்குடையைப் பயன்படுத்த முடியாமல், சாலையோரத்திலேயே ஆபத்தான முறையில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் பகுதியின் முக்கிய அடையாளமாக இருந்த இந்த நிழற்குடை இப்போது பயன்படுத்தவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 
எப்போது வேண்டுமானாலும் இடியும்
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தக் கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிழற்குடையை அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved