Also Watch
Read this
By: Fyrose Banu

காரமடை அரங்கநாத சுவாமி கோயில் மாசி மகத் திருவிழாவில் மின்னொளியில் ஜொலித்த தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காரமடை ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், இந்த ஆண்டுக்கான மாசி மகத் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு
தேரோட்டத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பரிவேட்டை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு, ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமி திருக்கோவிலின் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு எழுந்தருளினார்.

'செல்வ ரங்கநாதர்' ரூபத்தில் எழுந்தருளிய சுவாமி
அங்கு, ஆழ்வார் திருநகரியில் இருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்பட்ட தெப்பத் தேரில், சுவாமி 'செல்வ ரங்கநாதர்' ரூபத்தில் எழுந்தருளினார். வண்ணமயமான மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த தெப்பத் தேர் திருக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்த காட்சி காண்போரைக் கவர்ந்தது. விழாவின் நிறைவாக ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமானுக்கு மகா தீபாராதனை மற்றும் மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தரிசிக்க காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved