Also Watch
Read this
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு கருணைத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.

கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி...
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தவெக சார்பில், அப்போது 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, சென்னை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் கூறினார்.

அரசு பணி வழங்க...
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசு ஆட்சி அமைத்த நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அவர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இன்று ஜூலை 10ஆம் தேதி, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், 31 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான ஆணை மற்றும் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான கருணைத் தொகையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

முதலமைச்சர் விஜய் அழுதார் - பயனாளிகள்
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அழுததாக பயனாளிகள் தெரிவித்தனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களது குடும்பத்திற்கு அரசு பணி உதவியாக இருக்கும் என்றும் பயனாளிகள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
