Also Watch
Read this
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போன்ற திட்டங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது வருத்தமளிக்கிறது என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கூறி உள்ளது.

வரதட்சணை கொடுமை...
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது;
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில், சீனியர் என்ஜினியராகப் பணி புரிபவருக்கும், எனது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த தினத்தன்றே மாப்பிள்ளை வீட்டார் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வரதட்சணையாகப் பெற்றுக் கொண்டனர். ஜூன் 8ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் கூடுதலாக வரதட்சணை கேட்டு மிரட்டினர். அதற்கு நாங்கள் இயலாமையை தெரிவித்ததால், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர்.

போலீஸ் நிலையம் சென்றால்...
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், போலீசார் சட்டப்படி வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக, காவல் நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்து நடத்தி, மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து 5 லட்சம் ரூபாயை மட்டும் பெற்றுத் தந்துவிட்டு, மீதமுள்ள 5 லட்சம் ரூபாயை அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி, எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்தனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரி இருந்தார்.

பணப் பரிமாற்ற சமரசம் கூடாது
இந்த வழக்கு, நீதிபதி விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது;
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, தமிழக அரசு 'சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை போன்ற திட்டங்களை எடுத்து வரும் வேளையில், அடிமட்டத்தில் உள்ள சில அனைத்துப் பெண்கள் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக, கவலையளிக்கும் விதமாக உள்ளன. வரதட்சணைக் கொடுமை என்பது சமுதாய தீமை. புகாரில் கிரிமினல் குற்றம்
நடப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும்போது, காவல் துறையினர் தங்களை பஞ்சாயத்தாராகவோ அல்லது தனியார் மத்தியஸ்தர்களாகவோ நினைத்துக் கொண்டு பணப் பரிமாற்ற சமரசம் பேசக் கூடாது.

போலீசாருக்கு அபராதம்
சட்டத்தை நிலைநாட்டுவது தான் காவல்துறையின் கடமையே தவிர, அதை நீர்த்துப் போகச் செய்வது அல்ல. கடமை தவறியதற்காக ஆலங்குளம் அனைத்துப் பெண்கள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ மைய வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
இந்த வழக்கில் ஏன் FIR பதிவு செய்யப்படவில்லை? புகாரை சமரசமாக முடிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்பது குறித்து விரிவான விளக்கத்துடன் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.