Also Watch
Read this
By: Web Team

அதிமுகவில் இருந்து பிரிந்த முக்கிய பொறுப்பாளர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். இல்லையேல் ஒத்தக்கருத்து உள்ளவர்களை ஒருங்கிணைப்பேன் என்றும் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில், சொன்னது போலவே, இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செங்கோட்டையன் பேசியதாவது:
அதிமுகவை 1972ல் எம்ஜிஆர் தொடங்கினார். அப்போது, கொல்லம்பாளையத்தில் கிளைச் செயலாளராக எனது பணியைத் தொடங்கினேன். 1975ல் கோவையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில், பொருளாளராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டேன். எனது செயல்பாடுகளுக்காக என்னை அவர் பலமுறை நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார்.
எம்ஜிஆர், என்னை சத்தியமங்கலத்தில் போட்டியிடச் சொன்னார். நான் தயங்கியபோது, என் பெயரை சொன்னாலே வெற்றி கிடைக்கும் என்றார். அத்தகைய செல்வாக்கு மிக்க தலைவர் அவர். மக்கள் மனதில் நிறைந்தவர். இந்தியாவின் சிறந்த முதல்வர் என்ற பெருமை பெற்றுத் தந்தார்.
அவருக்குப் பின்னர் ஆளுமைமிக்க, மக்கள் செல்வாக்குள்ள ஜெயலலிதாவே கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஜெயலலிதாவும் சிறந்த முதல்வராக இருந்தார். அவருடைய ஆட்சி 5 முறை அமைந்தது. ஆன்மிகவாதி, திராவிடவாதிகளால் போற்றப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின்னர் இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்தன. அன்றைக்கு அனைவரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்து விடக் கூடாது என்பதற்காக சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தோம். மீண்டும் முதல்வராக இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழியப்பட்டார்.
இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றம் வந்தபோதும், தடுமாற்றமே இல்லாமல் திறம்பட நான் பணியாற்றியுள்ளேன். அதற்காக ஜெயலலிதா என்னைப் பலமுறை பாராட்டினார்.
நெடும் பயணத்தை மேற்கொள்ளும் போது பொறுப்புகள் கிடைக்கும்; சோதனைகளும் வரும்.
நான் தியாகம் செய்திருக்கிறேன். எனக்கு கட்சியில் 2 வாய்ப்பு கிடைத்தபோதும், இயக்கத்துக்காக தியாகம் செய்தேன். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்தல் களத்தை அதிமுக சந்தித்திருக்கிறது. 2019, 2021, 2024, பின்னர் உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தபோது களத்தில் பல பிரச்சினை.
முன்னாள் முதல்வர் கொண்டிருந்த ’மறப்போம் மன்னிப்போம்’ என்ற எண்ணம் வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லும்போது அவர்களை அரவணைக்க வேண்டும். இதுவே எனது கோரிக்கை.
ஆறு முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் அதனை ஏற்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் சேர்ந்தால் தான் வெற்றி நிச்சயம்.

அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கு நான் காலக்கெடு வைத்திருக்கிறேன். பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம். வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும்
ஒன்றுபடாமல் அதிமுக ஆட்சி மலரும் என்று எவராலும் கூற முடியாது
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved