கடந்த சட்டமன்ற தேர்தல் தந்த தோல்வியால், ராயபுரத்தை விட்டு சற்று தள்ளியிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தற்போது தன்னை தானே அதிமுக வேட்பாளராக அறிவித்துக் கொண்டு, மீண்டும் தொகுதியில் ரீ எண்ட்ரி கொடுத்து, அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார். ஜெயக்குமாரின் ரீ எண்ட்ரியையும், சிட்டிங் எம்.எல்.ஏ. ஐட்ரீம்ஸ் மூர்த்தியின் அமைதியையும் அரசியல் பார்வையாளர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.ஜெயக்குமாருக்கு மறக்கமுடியாத வலிமீனவர்களும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் தொகுதி ராயபுரம். தொகுதியின் பெயரை கேட்டதும் முதலில் நினைவுக்கு வருபவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான். என்னதான் பட்டினப்பாக்கத்துக்கு பார்சலானாலும் ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் ஜெயக்குமார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக அவர் கண்ட்ரோலில் இருந்த ராயபுரம், கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரிடம் இருந்து நழுவி போனது. அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது என்றாலும் ராயபுரம் மக்கள் தந்த தோல்வி ஜெயக்குமாரின் மனதில் நீங்காத வடுவாகவே அமைந்துவிட்டது. இப்படி ஜெயக்குமாருக்கு மறக்கமுடியாத வலியை தந்து வெற்றி பெற்றவர் தான் திமுகவை சேர்ந்த ஐட்ரீம்ஸ் மூர்த்தி.மக்களோடு மக்களாக பழகாமல்...தொகுதிக்கு பரிச்சயமில்லாதவர் என்றாலும் அவர் பெயரில் அடைமொழியாய் ஒட்டிக்கொண்டிருக்கும் ஐட்ரீம்ஸ் என்ற அவருக்கு சொந்தமான தியேட்டர் வடசென்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு இடமாகும். உள்ளூர்க்காரர் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு மாற்றத்தை விட பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறார் மூர்த்தி. சமூக நலக்கூடம், மருத்துவமனை கட்டடம். இவ்வளவு ஏன் தொகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான, கொருக்குபேட்டை போஜராஜன் நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை நிறைவேற்றியது வரை சொல்லத்தக்க வகையில் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டாலும், மக்களோடு மக்களாக அவர் பழகாமல் ஒதுங்கி செல்வதே அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜெயக்குமாருக்கு பின்னடைவு?எம்.எல்.ஏ.வான ஐந்தாண்டுகளில் மூர்த்தியின் தியேட்டரின் தோற்றம் மட்டுமே காலத்திற்கேற்ப அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் ராயபுரம் கல்மண்டபம் சாலையோ மழை நேரத்தில் கழிவுநீர் வெளியேறி குண்டும் குழியுமான அவல நிலையில் தான் காட்சியளிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதை அறிந்த ஜெயக்குமார், டச் விட்டுப்போன ராயபுரத்தில் மீண்டும் பம்பரம் போல் சுற்றி சுழன்று வருகிறாராம். மக்களோடு மக்களாக இயல்பாக பழகும் கேரக்டர் தான் ஜெயக்குமாருக்கு பிளஸ்சே என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். மாட மாளிகையானாலும் சரி மூலை முடுக்கென்றாலும் சரி ஜெயக்குமாரின் கால்தடம் பதியாத இடமே கிடையாது என மெச்சுகின்றனர். கடந்த தேர்தலில் தமது தோல்விக்கு கூட்டணியில் இடம்பெற்ற பாஜக தான் காரணம் என புலம்பித் தள்ளிய ஜெயக்குமார், மீண்டும் பாஜக கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. என்னை ஏன் கைவிட்டீர்கள்...?நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயக்குமார், நான் ஏதேனும் ஊழல் செய்திருக்கிறேனா? ஏதாவது தவறு செய்திருக்கிறேனா? என ஆதங்கத்துடன் வினவியதோடு, அப்படி ஏதாவதிருந்தால் சொல்லுங்கள் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். என்னை ஏன் கைவிட்டீர்கள்...? ராயபுரத்தில் தோற்க வேண்டிய ஆளா நான்? என நெஞ்சை தொடும்படி செண்டிமெண்டாக பேசியது, ராயபுரம் மக்களிடம் எடுபடுமா? என்பது கேள்விக்குறியே. திமுக வேட்பாளர் யார்?அதிமுகவில் வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிடுவது உறுதியாகியிருந்தாலும், திமுகவில் நிலவும் போட்டா போட்டியால் ஐட்ரீம்ஸ் மூர்த்தி கடுப்பில் ஆழ்ந்திருப்பதாக சொல்கிறார்கள். மூர்த்தி மீதான குற்றச்சாட்டுகளை கனிமொழியிடம் ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கும் வடசென்னை மகளிர் அணி அமைப்பாளர், தலைமையிடம் சீட் பெறுவதற்கு முட்டிமோதி வருகிறாராம். இவர்களை தவிர திமுக மாநில சிறுபான்மை அணியை சேர்ந்த மருத்துவர், சீட் கேட்டு, தலைமைக்கு குடைச்சல் தருவதாக அறிவாலய சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.தவெக, நாம் தமிழர் வேட்பாளர் யார்?திராவிட கட்சிகளில் ஒருபுறம் கோதா நடக்க, புதிதாக வந்த தவெகவிலும் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. மாவட்ட செயலாளரான கட்பீஸ் விஜய்க்கு சீட் வழங்கலாம் என தலைமை முடிவு செய்தாலும், தேர்தல் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு அவருக்கு சக்தியில்லை என கூறப்படுகிறது. எனவே, தொகுதி பொறுப்பாளரான நவீனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. நாம் தமிழர் கட்சியிலோ வேட்பாளர் யாரென்றே கணிக்க முடியாததால், கட்சியினர் சுணக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. Related Link காங்கிரசுக்கும் தெரியும், அரசியல் பிரேக்கிங்கை ஓபன் செய்த CM