Also Watch
Read this
By: Web Team

பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் 4, 5ஆவது வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில், நான்கு, ஐந்தாவது வார்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 20 தினங்களாக இப்பகுதியில் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள், முதியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகிறது.
கழிவுநீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்வதில்லை எனவும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் கொசு தொல்லை அதிகமாக
காணப்படுவதாகவும் இப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ள நிலையில், எஞ்சியோர் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனை அடுத்து பெரியபாளையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கழிவுநீர் கால்வாய்களை முறையாக சுத்தப்படுத்தி, பிளீச்சிங் பவுடர் மற்றும் மருத்துவ முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.