Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே புஷ்பகிரிக்கு செல்லும் சாலை அமைந்துள்ள பெரியார் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தனியாருக்கு சொந்தமான 2 .5 கிரவுண்டு இடத்தை அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகள் சாலையாக பயன்படுத்தி வந்தனர்.
2008 ஆம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலையும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே நிலத்தின் உரிமையாளர் தன்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் அனுமதியின்றி சாலை அமைத்ததாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் 2023 ல் உத்தரவிட்டதால் 20 வருடங்களுக்கு மேலாக குடியிருப்பு வாசிகள் சாலையாக பயன்படுத்திய ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர், இன்று அகற்ற முயற்சிக்கும்போது, அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் இந்தப் பாதையை மூடக்கூடாது, என எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் பொதுமக்கள் சாலையாக பயன்படுத்த முடியாத அளவில் உரிமையாளர் சுவரை எழுப்பியதால், தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதையில்லாமல் தவிப்பது குறிப்பிடத்தக்கது.