தேர்வில் சிக்கல் : நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அருகே தேரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி வசந்தி. கூலி வேலை செய்துவரும் கோபாலின் மகன் கண்ணன் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு கண்ணனுக்கு பள்ளி மூலம் பெற்றோர்கள் ஆதார் கார்டு எடுத்துக் கொடுத்துள்ளனர் ஆனால் கண்ணனின் ஆதார் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக அதே பள்ளியில் பயின்று வரும் கவின் என்பவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது.மேலும் கண்விழி கைரேகை உட்பட அனைத்து விபரங்களும் மாறி இடம்பெற்றுள்ளது இதனால் கண்ணனின் பெயரை குடும்ப அட்டையில் இருந்தும் கைரேகை பதிவு செய்ய முடியாததால் அரசின் சலுகைகளையும் பெறுவதில் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் வங்கி கணக்கில் ஆதார் கார்டை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தனது மகனின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் பிற விவரங்களை மாற்றி தரும்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக கோபால் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இசேவை மையம் மற்றும் ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இசேவை மையம் உட்பட பல இடங்களில் அலைந்து திரிந்தும் தற்போது வரை ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற முடியவில்லை. இந்நிலையில் அடுத்த மாதம் கண்ணனுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது இதற்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கு ஆதார் கார்டு தேவை என்பதால் கண்ணனுக்கு ஹால் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் தாய் வசந்திக்கு ஏற்பட்டது. அதேசமயம் ஆதார் பிரச்னை இருந்தாலும் தற்போதைக்கு ஹீல் டிக்கெட் வழங்குவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என்பதால் தனது மகனின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்படுமோ என வசந்தி அச்சத்தில் உள்ளார். எனவே அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கண்ணனுக்கு ஆதார் அட்டையில் மாறியுள்ள புகைப்படங்கள் மற்றும் பிற விபரங்களை சரி செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர். Related Link இராமநாதபுரம் RTO அலுவலகத்தில் நடக்கும் மோசடி