Also Watch
Read this
By: Manigandan Raja

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்களால், மாணவிகளுக்கு பாலியல்
தொல்லையில் ஈடுபடுவதாகவும் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும் கூறி பிரச்சனைக்குரிய கோடாலி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு, கோடாலி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சீருடை அணிந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் டாஸ்மாக் கடை நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறக்கப் போவதாக வதந்தி பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, நேராக டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர்.

பொதுமக்கள் பின்னே போலீசாரும் ஓடினர். அப்போது டாஸ்மாக் கடைக்கு சென்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கற்களை வீசி தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார் நாகலாபுரம் ஓடி டாஸ்மாக் கடையை தாக்க முயன்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.
இதில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, டாஸ்மாக் கடை முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசாரை கண்டித்து கோசமிட்டனர். மேலும் கொளுத்தும் வெயிலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பள்ளி மாணவர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது.
தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் டாஸ்மாக் கடை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர் .
பொதுமக்கள் போராட்டம் காரணமாக அணைக்கரை- ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.