Also Watch
Read this
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சொந்த சின்னத்தையே மறந்துபோன ஒருவரிடம் மீண்டும் நாட்டைக் கொடுத்தால் உருப்படுமா? என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் டிரான்ஸ்பர் ஆவதுபோல் கரூரில் இருந்து கோவை தெற்கிற்கு டிரான்ஸ்பர் ஆகி வந்துள்ள செந்தில் பாலாஜி கொரோனா வைரஸைவிட மோசமானவர் என விமர்சனம் செய்துள்ளார். கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், மலை மீது மோதினால் மண்டைதான் உடையும் என பிரதமர் மோடியுடன் மோதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

கோவையில் இபிஎஸ்
கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் சட்டசபைத் தொகுதி அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசியதாவது:
காற்றில் பரவும் கொரோனா வைரஸை விட கொடுமையானது கோவை தெற்கு தொகுதியில் இன்றைக்கு பரவி உள்ளது.
கொரோனா வைரஸூக்கு மருந்து உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு தோல்வியைத் தர வேண்டும். ஐந்து கட்சிகள் மாறிய அரசியல் வியாபாரியை மக்கள் நம்ப வேண்டாம். மக்களை நம்பி அதிமுக நிற்கிறது. செந்தில் பாலாஜி ஏன் கரூரில் நிற்கவில்லை? கரூரை சுரண்டி முடித்துவிட்டு, தற்போது தொழில் மாநகரான கோவைக்கு வந்துள்ளார். கருணாநிதி இருக்கும்போது செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் என்னென்ன பேசினார் என்பது இன்னமும் உள்ளது. அரக்கனை விட கொடியவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிகாரிகள் மீது...
ஆட்சி மாறும்போது காட்சி மாறும். இன்றைக்கு ஆளுங்கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் உரிய முறையில் வேலை செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் கோவையில் எங்கும் நான் கருப்புக் கொடிகளை பார்க்கவில்லை. தொகுதி மறுவரையறையால் எந்த விதத்திலும் தமிழகம் பாதிக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசு தொகுதி மறுவரையறையை எவ்வித பாதிப்பும் இன்றி எல்லா மாநிலங்களுக்கும் பாரபட்சமில்லாமல் அருமையாக செயல்படுத்தும்.

அரசியல் நாடகம்
மத்திய அரசு மிகத் தெளிவாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டால் மத்திய அரசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதை தடுக்கவே கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்துகிறார். மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றபோது எந்த திட்டங்களும் தரவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்த முதல் 3 மாதத்தில் முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டில் கோவைக்கு என்ன திட்டங்களை திமுக செய்தது என பட்டியலிட்டு சொல்ல முடியுமா?
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved