Also Watch
Read this
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல் கொள்ளையை தட்டிக்கேட்ட விவசாயியை தாக்கி, 30 அடி ஆழக் குழிக்குள் தள்ளி, உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொதித்தெழ வைத்திருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார்?

சட்டவிரோத மணல் கொள்ளை, ராஜ்ஜியம்
தஞ்சாவூர் மாவட்டம், கிளைக்காட்டிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். நெல் மற்றும் பருத்தி விவசாயம் செய்து வரும் இவருக்கு, சொந்த நிலமே ஜீவனோபாயம். இவரது நிலத்திற்கு அருகிலேயே முடிகொண்டான் ஆறு ஓடும் நிலையில், இந்த ஆற்றுப்படுகை பகுதியிலும், அதை ஒட்டியுள்ள நிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகவே மணல் கொள்ளை நடந்து வருவதாக புகார் எழுந்திருக்கிறது. திமுக மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான செந்தில் என்பவர் தான் இந்த சட்டவிரோத ராஜ்ஜியத்தின் பின்னணியில் இருப்பதாக கொதித்து எழுகிறார்கள் கிராம மக்கள்.
திமிரோடு மணல் கொள்ளை
திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனின் உறவினர் என்கிற பவரோடு வலம்வரும் செந்தில், தன் கைவசம் உள்ள இடத்திலும் ஆற்றுப் பகுதியிலும் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி, 20 அடியில் தொடங்கி 30 அடி ஆழம் வரை மண்ணை வாரி சுருட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தவர் வயல் என்னவானால் என்ன? தன் உண்டியல் நிரம்பினால் போதும் என்ற ரீதியில் செந்தில் செய்த இந்த நாசவேலையால், சங்கரின் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சரிந்திருக்கிறது. வயலுக்கு பாய்ச்சும் தண்ணீரும் அந்த ராட்சத குழிகளுக்குள்ளேயே வடிந்து போவதால், சாகுபடி பரப்பு நட்டத்திலேயே முடிந்திருக்கிறது. இதை பலமுறை தட்டி கேட்டுள்ளார் சங்கர். ஆனால், எங்களை யாருடா கேட்கிறது? என்ற திமிரோடு தொடர்ந்திருக்கிறது மணல் கொள்ளை.

30 அடி ஆழக் குழிக்குள் தள்ளி...
வழக்கம் போல், கடந்த 2ஆம் தேதி காலை தனது வயல் வேலைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார் சங்கர். அப்போது, ஏற்கெனவே, தோண்டப்பட்ட 20 அடி ஆழக் குழிக்கு அருகில், மேலும், 10 அடி ஆழத்திற்கு பொக்லைன் இயந்திரத்தை வைத்து குழி தோண்டி, டிராக்டர்களில் மணலை கடத்தி கொண்டிருந்துள்ளனர் மணல் கொள்ளையர். அதனை கண்டதும் ஆவேசம் அடைந்த சங்கர், அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில், அவரது மகன் ஜேசிபி, டிராக்டர் ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், சங்கரைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாக தாக்கி உள்ளனர். அத்துடன் நிற்காமல், பொக்லைன் இயந்திரத்தை கொண்டே அவரை தாக்கி, மணல் அள்ளத் தோண்டப்பட்ட 30 அடி ஆழக் குழிக்குள் தள்ளி மூச்சுத்திணற வைத்து புதைக்க முயன்றுள்ளனர்.

கொந்தளிப்பும் பதற்றமும்
குழிக்குள் புதையுண்ட சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவியும், கிராம மக்களும் ஓடி வந்தனர். ஆட்கள் திரண்டு வருவதை பார்த்த மணல் கொள்ளை கும்பல், பொக்லைன், டிராக்டருடன் அங்கிருந்து தப்பியோடியது. உயிருக்குப் போராடிய சங்கரை மீட்ட கிராம மக்கள், ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிளைக்காட்டிருப்பு பகுதியில் நடக்கும் இந்த அராஜகம் குறித்து, நாச்சியார்கோவில் காவல்நிலையம் கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், இன்று விவசாயி படுகொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு மணல் கொள்ளையர்கள் துணிந்துவிட்டதாக கதறுகின்றனர் அப்பகுதி மக்கள். ஒரு விவசாயியை உயிருடன் குழிதோண்டி புதைக்க முயன்ற இந்த சம்பவம், கும்பகோணம் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.