Also Watch
Read this
அரசின் மொத்த கடன் சுமை எவ்வளவு?, தனிநபர் கடன் எவ்வளவு?, வருவாய் பற்றாக்குறை எவ்வளவு? தவிர்க்கமுடியாத கட்டாயச் செலவுகள், வட்டிச் செலவுகள் உள்ளிட்டவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

தவெக ஆட்சியில்...
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மே 10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடன் சுமை எவ்வளவு?

ஐந்தே ஆண்டுகளில் இரட்டிப்பு
கொரோனா பெருந்தொற்று தலைவிரித்தாடிய 2020-21 நிதியாண்டில் 5.13 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன் சுமை, 2021-22ல் 5.96 லட்சம் கோடியாகவும், 2022-23ல் 6.77 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. 2023 -24ல் 7.58 லட்சம் கோடியாகவும், 2024-25ல் 8.53 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. கடந்த ஐந்தே ஆண்டுகளில் கடன் சுமை இரட்டிப்பாகி 2025-26ல் சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் புதிதாக 4.87 லட்சம் கோடி ரூபாய் கடனாக பெறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட கடன் மட்டும், சுதந்திரத்திற்கு பிறகான 60 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பெற்ற மொத்தக் கடன் தொகையை விட அதிகமாகும்.

தனிநபர் கடன்சுமை உயர்வு
தனிநபர் கடனை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சராசரியாக 1.29 லட்சம் ரூபாய் கடன் சுமை உள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் 67,087 ரூபாயாக இருந்த தனிநபர் கடன் சுமை, 2025 - 26 நிதியாண்டில் ஒரு லட்சத்து 28,934 ரூபாயாக உயர்ந்துள்ளது.

வருவாய் பற்றாக்குறை
2025-26 நிலவரப்படி ஒவ்வொரு ஆண்டும் வட்டியாக மட்டுமே 67,050 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டியுள்ளது. இது மாநிலத்தின் மொத்த செலவினத்தில் 22.8 சதவீதம் ஆகும். மாநிலத்தின் மொத்த வருவாயில் சுமார் 64.4 சதவீதம், வட்டிச் செலவுகள், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றுக்கே செலவாகிறது. இதனால் அரசின் வருவாய் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடியாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.