Also Watch
Read this
தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். குத்தகை விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று த.வெ.க. வாக்குறுதி உள்ளிட்ட எந்த திட்ட அறிவிப்பும் இல்லை என்றும் விமர்சித்து உள்ளார்.

வாக்குறுதிகள் இடம் பெறவில்லை
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது;
தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறவில்லை. இரண்டரை மணி நேரம் பட்ஜெட் வாசித்ததில், புதியதாக ஒரு திட்டமும் இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
இனிக்க இனிக்க ஏமாற்றம்
மேகதாது அணை குறித்தெல்லாம் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தந்தோம். வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் தரலாம். தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், அவை பட்ஜெட்டில் இல்லை. பொது பட்ஜெட் போல, ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சி போல தவெகவின் வேளாண் பட்ஜெட்டும் ஒரு நாடகம். இனிக்க இனிக்க விவசாயிகளை ஏமாற்றி இருக்கின்றனர்.

ஒரு பயனும் இல்லை
கடந்த திமுக அரசும், இப்போதைய தவெக அரசும் விவசாயிகளை ஏமாற்றி நாடகம் ஆடுகிறது. தேர்தல் வாக்குறுதி போல் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. 20 துறைகளை ஒன்றாக இணைத்து வேளாண் பட்ஜெட் என்கின்றனர். பிறகு ஏன் 20 துறைகளுக்கும் அமைச்சர்? மானிய கோரிக்கைகள் தேவை. வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் 2.35 மணி நேரம் பேசி உள்ளார். இது தான் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், விவசாய மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.