Also Watch
Read this
திருப்பத்தூர் மாவட்டம், கோணாப்பட்டு பகுதியில் நடுநிசி நேரத்தில் முட்டை குடோனில் தங்கியிருந்த பழக்கடை பாட்டியை கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு நல்லவனை போல் சுற்றித்திரிந்த கியூ பிரான்ச் அலுவலக தூய்மை பணியாளர், செல்போன் சிக்னல் மூலம் வசமாக சிக்கினான். கை நீட்டி வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் கம்பி கட்டும் கதையை கூறிய வந்த தூய்மை பணியாளரை மூதாட்டி திட்டி தீர்த்து அவமானப்படுத்திய ஆத்திரத்தில் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

பழக்கடை பாட்டி...
திருப்பத்தூர் மாவட்டம், கோணாப்பட்டு பகுதியைச் சேர்ந்த 68 வயதான மூதாட்டி சந்திரா என்பவர், தனது கணவர் உயிரிழந்த நிலையில் திருப்பத்தூர் கியூ பிரான்ச் அலுவலகம் முன்பு சிறிய அளவிலான பழக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அவரது பழக்கடை அருகிலுள்ள முட்டை குடோனில், இரவில் பழங்களை பாதுகாப்பாக மூதாட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி பழங்களை வழக்கம் போல் குடோனில் வைத்த மூதாட்டி, கொட்டிய கனமழையால் வீட்டுக்கு செல்ல முடியாமல் அந்த குடோனிலேயே இரவு தங்கி இருக்கிறார்.

கடும் துர்நாற்றம்...
அடுத்த நாள் காலையில் மூதாட்டி எழுந்து வெளியே வரவும் இல்லை. பழக்கடையை போடவும் இல்லை. ஆனால் குடோனில் மட்டும் கடுமையான துர்நாற்றம் மட்டும் வீசி இருக்கிறது. அதனை தொடர்ந்து கியூ பிரான்ச் போலீசார் சோதனை செய்ததில், ரத்த வெள்ளத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த சம்பவத்தின் போது முட்டை குடோனில் காட்டிய செல்போன் சிக்னலின் மூலம் கொலையாளி பிடிபட்டார். 15 நாட்களாக போலீசார் வெளியில் குற்றவாளியை தேடிக் கொண்டிருந்த நிலையில், அந்த கியூ பிரான்ச் அலுவலகத்தில் ஒன்றுமே தெரியாததை போல் பணி செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர் ராமு என்பது தெரிய வந்தது.

வாங்கிய கடனால்...
சந்திரா கொலை வழக்கின் குற்றவாளியை பிடிப்பதற்கு போலீசார் என்னவெல்லாம் செய்கின்றனர் என, கருப்பு ஆட்டை போல் அருகில் இருந்தே உன்னிப்பாக கவனித்த அவர் சாதுர்யமாக எஸ்கேப் ஆனதாக சொல்லப்படுகிறது. அவரை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்ததில், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் பார்க்கும் இடங்களில் வைத்து தன்னை மூதாட்டி அவமானப்படுத்தும் வகையில் பேசிய ஆத்திரத்தில் கொலை செய்ய திட்டம் போட்டதாக தெரிவித்தார்.

6 கிராம் நகையும் திருட்டு
இதேபோல், பலரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கலில் இருந்ததால் மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகளை திருடி கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்ததாகவும் கூறினான். போட்ட திட்டத்தை ஆள் நடமாட்டம் இல்லாத அர்த்த ராத்தரியில் மூதாட்டியை கொலையும் செய்து அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்கத்தை திருடியதோடு, தனது நண்பரின் மூலம் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து கடனை அடைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்த பின்னர் மூதாட்டி அணிந்திருந்த துணி, சுருக்குப்பை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை பாபநாசம் பாணியில் கியூ பிரான்ஞ் பழைய கட்டடத்தில் மறைத்து வைத்ததும் அம்பலமானது. பாபநாசம் திரைப்படத்தில் உடலை காவல்நிலையம் கட்டடத்தில் புதைத்து வைத்ததை போல், கொலை செய்த போது கைரேகை பதிவான பொருட்களை போலீசாரின் கட்டடத்தில் மறைத்திருக்கிறான் இந்த ராமு. பின்னர் அந்த பொருட்களை சிசிடிவி கேமரா இல்லாத பகுதி வழியாக சென்று வெங்களாபுரம் ஏரியில் வீசி சென்று கமுக்கமாக சுற்றி திரிந்துள்ளான். கடைசியில், செல்போன் சிக்னலில் சிக்கி விட்டான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved