Also Watch
Read this
'மாங்கனி நகரம்' என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், 140 ஆண்டுகளாக பார்த்து பார்த்து வளர்த்த மா மரங்களை விவசாயிகள் தங்கள் கைகளாலேயே வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வாழ்வாதாரத்திற்கு வழியின்றி பரிதவிக்கும் மா விவசாயிகள், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

5,000 மெட்ரிக் டன் உற்பத்தி
தமிழகத்தில், மா சாகுபடியில் முன்னிலை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள், பல தலைமுறைகளாக பாதுகாத்து வளர்க்கப்பட்ட மா மரங்களை கனத்த நெஞ்சத்துடன் வெட்டினர். மாங்கனி நகரில் சுமார் 33 ஹெக்டர் பரப்பளவில் பெங்களூரா, நீலம், அல்போன்சா, மல்லிகா, மல்கோவா உள்ளிட்ட 12 வகை மாங்காய்கள் விளைவிக்கப்பட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆண்டுதோறும் சுமார் 5,000 மெட்ரிக் டன் மாங்கனிகள் உற்பத்தியாகும் இந்த மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளாக மாங்காய் விலை தொடர்ந்து குறைந்து வருவது, விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மா வளர்ப்பு என் தலைமுறையுடன் முடிகிறது”
இதன் உச்சமாக, கிருஷ்ணகிரி அருகே புளியூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி, பல தலைமுறைகளாக பராமரித்து வந்த 140 ஆண்டுகள் பழமையான 50க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். “மா வளர்ப்பு என் தலைமுறையுடன் முடிகிறது” என வலியுடன், அவர் கூறியுள்ளார். உற்பத்தி செலவுக்கு கூட வருமானம் கிடைக்காத நிலை உருவாகி உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க ஊரை விட்டுச் செல்லும் நிலை உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மா விவசாயிகள் கோரிக்கை
கடந்த 10 ஆண்டுகளில், கிருஷ்ணகிரியில் மா சாகுபடி பரப்பளவு 43,000 ஹெக்டேரிலிருந்து 33,000 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், “மாங்கனி நகரம்” என்ற அடையாளமே முற்றிலும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கும் விவசாயிகள், காலங்கள் மாறுகிறதே தவிர கவலைகள் மாறுவதில்லை என வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், மா விவசாயத்தை காக்க மன்றாடும் விவசாயிகள் ஆணையம் அமைத்துத் தரவேண்டும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு உரிய விலையை நிலைப்படுத்த வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இல்லையெனில் பாரம்பரிய மா தோட்டங்கள் முற்றிலும் அழிந்து விடும் சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved