Also Watch
Read this
அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என 7 நாட்களில் விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களான,
மதுராந்தகம் மரகதம் குமரவேல்
தாராபுரம் சத்யபாமா
பெருந்துறை ஜெயக்குமார்
அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா
ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனே தவெகவில் இணைந்தனர்.
தவெகவில் இணைந்த இந்த 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுக மனு அளித்தது. இந்த சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 4 பேருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

எம்எல்ஏக்களுக்கு புத்தாக்க பயிற்சி
இதுகுறித்து, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது;
அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வரும் ஜூன் 16, 17ஆம் தேதிகளில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் புத்தாக்க பயிற்சி நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ள இந்த நிகழ்வில், உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, விதிகள் குறித்து பேரவை செயலாளர், அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் பயிற்சி தர உள்ளனர். இந்தப் பயிற்சியில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்பட்டு உள்ளது.

நேரலையில் சட்டப்பேரவை
சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய பரிசீலனை செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் அனைவரின் கருத்துக்கும் நான் மதிப்பளிப்பேன். ஆளுநர் உரையின் நகல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் அளிக்கப்படும்

ராஜினாமா விவகாரம்
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. ராஜினாமா குறித்து விளக்கம் தர ஏழு நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அதிமுக கொறடா யார்? என்பது குறித்த மனுக்கள் மீது ஆய்வு நடக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே இதுகுறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved