Also Watch
Read this
சென்னை, வேளச்சேரியில் லீஸ் எனக்கூறி ஒரே வீட்டை ஊடகவியலாளர் உள்ளிட்ட பலருக்கு காண்பித்து, கோடிக்கணக்கில் ஏப்பம்விட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளியை காவல்துறையே தப்ப வைத்துவிட்டு கேம் ஆடுகிறதா? என்ற கேள்வி பாதிக்கப்பட்டவர்களுக்கு எழுந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து, கொலை மிரட்டல் என திட்டம்போட்டு பணத்தை அமுக்கிய மோசடி கும்பல் குறித்து பல புகார்கள் வந்தும், வேளச்சேரி காவல்துறை வேடிக்கை பார்த்தது ஏன்? அப்படியானால் காவல்துறையே உடந்தையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வீடு லீசுக்கு...
சென்னை, பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண் வெண்ணிலா. இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரியில் லீசுக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். தனியார் விளம்பர நிறுவனம் மூலம் 7 லட்சம் ரூபாய்க்கு, ஒரு வீடு இருப்பதை பார்த்த வெண்ணிலா அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர் லட்சுமிபுரத்திற்கு வந்தால் வீட்டை காட்டுவதாக கூற, நேரில் சென்ற வெண்ணிலாவிடம், தான் ஹவுஸ் ஓனர் என்றும் தனது பெயர் அக்பர் ஷெரிப் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், அக்பர் ஷெரிப், அவரது அண்ணன் முசாமில் ஷெரீப், அவரது நண்பர் இம்ரான் கான் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒரு வீட்டை வெண்ணிலாவிடம் காண்பித்துள்ளனர்.

ரூ. 7 லட்சம்
பக்கத்து வீட்டில் உள்ள ஒருவரிடம் வீட்டைப்பற்றி வெண்ணிலா விசாரித்தபோது ஹவுஸ் ஓனர் தொல்லை இல்லை, தண்ணீர் பிரச்சினை இல்லை, சொந்த வீடு போன்று நிம்மதியாக வாழலாம் என பாசிட்டிவ் FEEDBACK வர பெரும் நம்பிக்கையுடன் 7 லட்சம் ரூபாயை எண்ணிக் கொடுத்தார். லம்பாக காந்தி நோட்டுக்களை பெற்றுக்கொண்ட அக்பர் ஷெரிப், ஒயிட் வாஷ் செய்து வீட்டை பளிச்சென புது வீடுபோல மாற்றி ஒரே வாரத்தில் தருவதாககூறி வெண்ணிலாவை அனுப்பி வைத்தனர். சொன்னபடியே ஒரு வாரம் கழித்து அக்பர் ஷெரிப்புக்கு போன் செய்தார் வெண்ணிலா. ஒயிட் வாஷ் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவே இல்லை என காரணம்கூறிய ஹவுஸ் ஓனர் அடுத்தடுத்து காரணங்கள் தான் கூறினாரே தவிர வீட்டுச்சாவியை கண்ணில் காட்டவே இல்லை.

பணத்தை திருப்பிக் கேட்ட போது...
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வெண்ணிலா நேரில் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போதுதான், லீசுக்கு வீடு என்ற போர்வையில் முகமது ஷெரிப்பும், அவரது கும்பலும் பலபேரின் பணப்பையை துடைத்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டதே தெரியவந்தது. ”பணம் கேட்டால் பிணமாக்கி விடுவோம்” என மோசடி கும்பல் சூழ்ந்து கொண்டு மிரட்டல் விடுக்க வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வெண்ணிலா. அந்த புகாருக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும், பணம் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த வெண்ணிலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வேளச்சேரி போலீசார் அந்த புகாரை பத்தோடு பதினொன்றாக டேபிளில் போட்டதாக கூறப்படுகிறது. காரணம், உண்மையிலேயே வீடு லீஸ் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் வெண்ணிலா பலரில் ஒருவராம்.

மோசடி, மாஸ்டர் பிளான்...
ஒரே வீட்டை பலருக்கு லீசுக்கு காட்டி ஒரு நபரிடம் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கறந்துள்ள முகமது ஷெரிப்பும், அவரது கும்பலும் பல லட்சங்களை வாரி சுருட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடி அவ்வளவு சாதாரணமாக எல்லாம் நடந்து விடவில்லை. அதற்கு பின்னால் பெரிய மாஸ்டர் பிளானும், பக்கா செட்டப்பும் இருந்துள்ளது. அந்த ஹவுஸ் ஓனரா தங்கமாச்சே, தங்கள் வீட்டின் லீஸ் அக்ரீமெண்ட் முடியவில்லை, இல்லாவிட்டால் நாங்களே அங்கு சென்றுவிடுவோம், என்ன செய்வது? என ஏக்கப் பெருமூச்சுடன் துணிகளை காயப் போட்டுக் கொண்டே இயல்பாக பக்கத்து வீட்டில் ஒருவரை பேச வைப்பது தான் முதல் தூண்டில். அந்த தூண்டிலில் சிக்கியவர்களிடம் பணத்தை பெற்றதும், சில நாட்கள் தட்டிக்கழித்து நாட்களை கடத்தும் அந்த கும்பல், பணம் கேட்டு யார் நெருக்கடி கொடுத்தாலும் கட்டப்பஞ்சாயத்து கும்பலை வைத்து கொலை மிரட்டல் விடுப்பார்கள்.

உயிரா? பணமா?
இப்படியே பல லட்சங்களை ஏப்பம்விட்ட கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட அனைவருமே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குவிந்த புகார்களில் ஒன்றுக்குக் கூட காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், லீசுக்கு வீடு எனக்கூறி பலரது பியூஸை பிடுங்கிய கும்பலிடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு ஊடகவியலாளரும் 5 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தார். உயிரா? பணமா? என ஊடகவியலாளரையும் அவரது குடும்பத்தினரையும் ரவுடி கும்பல் மிரட்ட கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் புகார் அளித்தார்.

நடவடிக்கை இல்லை
வேளச்சேரி காவல் நிலையத்தை தொடர்ந்து AC, DC என உயர்மட்ட காக்கிகளின் அலுவலக கதவுகளையும் தட்டி பார்த்தார் ஊடகவியலாளர். ஆனாலும், மோசடி கும்பலை பிடிக்கவில்லை போலீசார். கணக்கில்லாத புகார்கள் வந்தும் காக்கிகள் கண்டுகொள்ளவில்லையென்றால் மோசடி கும்பலுக்கு அவர்களே உடந்தையா? அதனால்தான் அவர்களை பிடிக்க நாட்டம் காட்டவில்லையா? பலரும் கேள்விக்குமேல் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

முக்கிய குற்றவாளி எங்கே?
அதோடு, காவல்துறை மேல்மட்டம் தரப்பில் இருந்தும் அழுத்தம் வந்ததாக தெரிகிறது. இதன் விளைவாக, அக்பர் ஷெரிப்பின் அண்ணன் முசாமில் ஷெரீப்பையும், அவரது நண்பர் இம்ரான் கானையும் போலீசார் கைது செய்தனர். கேள்விகளும், அழுத்தங்களும் அதிகமானதும் இருவரை கைது செய்த போலீசாருக்கு மோசடி கும்பலின் முக்கிய புள்ளியான அக்பர் ஷெரீப்பை கைது செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அவனை தப்ப வைத்துவிட்டு காவல் துறையே சப்பைக்கட்டு கட்டுகிறதா? அப்படியானால் மோசடிக்காரன் அக்பர் ஷெரீப்புக்கு காவல்துறையே பாதுகாப்பா? என கொந்தளிக்கும் பொது மக்களும், பாதிக்கப்பட்டவர்களும், ஏழைகளின் வயிற்றில் அடித்து பிழைக்கும் கும்பல் குறித்து முதல் புகார் வந்தபோதே போலீசார் விழித்துக்கொண்டிருந்தால் அடுத்தடுத்து மோசடி நடந்திருக்குமா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved