Also Watch
Read this
By: Web Team

மானாமதுரை அருகே அரிமண்டபம் கிராமத்தில், மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் கிராம பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சுந்தரவல்லி அய்யனார் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஏழு நாட்கள் விரதம் இருந்த ஊர் மக்கள், நவதானியங்களை விதைத்து வழிபட்டனர்.

பின்னர், முளைப்பாரிகளை கோயில் முன்பாக வைத்து கும்மி பாட்டு, ஒயிலாட்டம் என கொண்டாடிய கிராம மக்கள், சுந்தரவல்லி அய்யனார் கோயிலில், படையல் வைத்து வணங்கி உணவு பரிமாறி வழிபட்டனர். ஏழு நாட்கள் விதைத்து வழிபட்ட முளைப்பாரிகளை தூக்கி சென்று கண்மாயில் கரைத்து சூரிய பகவான் உதிக்கும் திசையை நோக்கி கும்பிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.