Also Watch
Read this
By: Manigandan Raja

குறைந்து வரும் வீராணம் ஏரி நீர் :
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி பகுதியிலிருந்து வீராணம் ஏரி துவங்குகிறது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் இருந்து வருகிறது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1465 மில்லியன் கனஅடி. தற்போதைய நீர் இருப்பு 937.35 மில்லியன் கன அடி. ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி.
தற்போதைய நீர் மட்டம் 45.31 அடி என நீர் அளவு இருந்து வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக 73 கன அடி தண்ணீர் சென்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஏரிப்பகுதியில் கடுமையான வெப்பம் அதிகரித்து வருவதால் ஏரியின் நீர் அதிகளவில் ஆவியாகியும் வருகிறது.
தற்போது ஏரியின் கிழக்கு பகுதிகளில் விவசாயிகள் பலர் குறுவை சாகுபடி பணிக்காக வயல் உழவு செய்வது, நாற்றங்கள் அமைப்பது உள்ளிட்ட பல விவசாயப்பணிகளை செய்து வருகிறார்கள்.மேலும் பல விவசாயிகள் கரும்பு சாகுபடி பணிகளையும் துவக்கி வருகிறார்கள்.
இவ்வாறான சூழலில் இப்போது விவசாயப்பணிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் அவர்கள் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். போர்வெல் பாசனத்தினாலும் அவர்களால் போதுமான தண்ணீர் பெறமுடியாத நிலையும்
இருக்கிறது.இந்நிலையில் தற்போதைய நிலையில் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஏனெனில் பாசன வாய்க்கால்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டுபோனதால் விவாசயப்பணிகள் செய்வதில் பெரும் சிரமும் வேதனையும் ஏற்பட்டுள்ளது. அதனால் வீராணம் ஏரியிலிருந்து அனைத்து பாசன வாய்க்கால்களிலும் குறைந்தப்பட்ச பாசனத்தேவைக்காக முதற்கட்டமாக தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயத்தேவைக்கும் மற்றும் கோடையால் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தையும் சரிசெய்ய உதவியாக இருக்கும் எனவும் விவசாயிகள் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.