Also Watch
Read this
கடந்த திமுக ஆட்சியில் கட்டிங், கமிஷன், கரப்ஷன் இருந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ள நிலையில், அதனை நீங்கள் ஏன் அந்த கூட்டணியில் இருந்தபோது சொல்லவில்லை? என செய்தியாளர் கேள்வி எழுப்பியதால் வைகோ கடுப்பில் சீறிப் பாய்ந்தார். அதிலும் ஒரு திருக்குறளை சுட்டிக்காட்டி மீண்டும் மீண்டும் நிருபர் கேள்விகளால் துளைக்க, அவரை மரியாதையாக வெளியில் செல்லுமாறு மிரட்டிய வைகோ, தனது நிர்வாகிகள் மூலம் கட்டாயமாக வெளியேற்றியும் உள்ளார்.

தவெகவுக்கு மதிமுக ஆதரவு
திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ள மதிமுக, தவெகவுக்கு வெளிப்படையாகவே ஆதரவும் அளித்து வருகிறது. அதோடு, திமுகவை விமர்சனமும் செய்ய ஆரம்பித்து விட்டது. இதனால், இருகட்சியினரும் சமூகவலைதளங்களில் கருத்து மோதலையும் கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் களவாக்கம் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கேள்வி எழுப்பிய ஒரு நிருபர், கூட்டணியில் இருந்தபோது எதையும் பேசாமல் வெளிவந்த பின்னர் பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

திமுக மீது விமர்சனம்
அப்போது, கடந்த திமுக ஆட்சியில் 1 சதுர அடிக்கு இவ்வளவு கமிஷன் என கணக்கிட்டு லஞ்சம் பெற்றதாகவும், கமிஷன், கட்டிங், கரப்ஷன் இருந்ததால்தான் மக்கள் வெறுப்பின் உச்சிக்கே சென்றதாகவும் குற்றம்சாட்டிய வைகோ லஞ்ச லாவண்யத்தையே முதலமைச்சர் விஜய் ஒழித்துக் கட்டிவிட்டதாகவும் கூறினார்.

அதற்கு, இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் நீங்கள் ஏன் அந்த கூட்டணியில் இருந்தீர்கள்? என மீண்டும் நிருபர் கேள்வி எழுப்ப கடுப்பான வைகோ, ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டு அந்த கட்சியை பற்றி பேசுவது அயோக்கியத்தனம், கூட்டணி கட்சியை அட்டாக் செய்வது அநாகரிகம், அது அரசியல் தர்மமே இல்லை என விநோதமாக பதிலளித்தார்.

காரசார வாக்குவாதம்
அப்போது, கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவின் ஊழல் பற்றி பேசாமல் இருந்தது உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லையா? என மீண்டும் செய்தியாளர் கேள்வி எழுப்ப, கூட்டணி தர்மத்திற்காக பேசாமல் இருப்பதில் என்ன தவறு உள்ளது? என சீறினார் வைகோ.

ஆனால் விடாத நிருபர், ’இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, கூட்டணி கட்சியின் தவறை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்துவது தானே சரியான அணுகுமுறை, கூட்டணியில் இருந்து விலகிய பிறகுதானே பேசுகிறீர்கள்? என மீண்டும் கேள்வியால் துளைக்க வைகோவிற்கு ஆத்திரம் தலைக்கேறியது.

கொந்தளித்த வைகோ
தனக்கு 1330 திருக்குறளும் அத்துப்படி, அதனால் திருக்குறள் சொல்லும் வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் என செய்தியாளரை நோக்கி பாய்ந்த வைகோ, திட்டமிட்டே வந்துள்ளதுபோல் தெரிகிறதே? நீங்க மஞ்சள் பத்திரிகையா? உங்கள் பத்திரிகை முதலாளிதான் ஏவிவிட்டுள்ளாரா?

நீங்கள் இதற்குமேல் கேள்வி கேட்டால் மரியாதை இல்லை, வெளியே போகலாம் என ஆத்திரத்தை காட்டியதோடு அவரை வெளியே அனுப்புமாறு தங்கள் நிர்வாகிகளை நோக்கி ஆணையும் பிறப்பித்தார். இதனை தொடர்ந்து அந்த செய்தியாளரை மதிமுகவினர் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றினர்.

இது தான் வைகோ ஸ்டைல்
இந்தியாவில் மிக மூத்த அரசியல்வாதி என்ற பெயர் இருந்தாலும் பொதுவாக செய்தியாளர் சந்திப்பில் வைகோவுக்கு எதிராக யார் கேள்வி கேட்டாலும் அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் நீங்கள் எந்த பத்திரிகை? உங்கள் பெயர் என்ன? ஊர் என்ன? என ஆக்ரோஷமாக எதிர் கேள்வி கேட்பதுதான் வைகோவின் ஸ்டைல். அதுதான், தற்போதைய செய்தியாளர் சந்திப்பிலும் நிகழ்ந்துள்ளது.

ஆனால், ஒரு மூத்த அரசியல்வாதி கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர கேள்வி கேட்கும் செய்தியாளர்கள் மீதே தவறு உள்ளதுபோல் ஆக்ரோஷத்துடன் நடந்துகொள்வது சரியல்ல எனவும் தான் நினைப்பதை மட்டும்தான் பேச வேண்டும் என்றால் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டால் போதுமே, ஏன் செய்தியாளர் சந்திப்பு எனவும் கூறி வருகின்றனர்.