Also Watch
Read this
திருச்சி கிழக்கில் போட்டி என்பது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என 2 வீடியோக்களை வெளியிட்டு சஸ்பென்ஸ் காட்டி வந்த ராகவா லாரன்ஸ் தற்போது அங்கு தான் போட்டியிடவில்லை எனக்கூறி மறுபடியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். வந்தவுடனேயே பதவி கிடைத்துவிடுமா? அதை எதிர்பார்ப்பது தான் முறையா? என நியாய தர்மம் பேசியுள்ள லாரன்ஸ், ஆனால் தான் அரசியலுக்கு வருவது உறுதி என பொடி வைத்தும்பேச, கடுப்பான ரசிகர்கள் திருச்சி கிழக்கில் போட்டியில்லை என்பதை முதல் வீடியோவிலேயே தெரிவித்திருக்கலாமே? எனக் கூறி வருகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில்...
முதலமைச்சர் விஜய் ராஜினாமாவால் காலியாக உள்ள திருச்சி கிழக்கில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பென்ஸ் பட சூட்டிங் முடிந்த கையோடு ஆர்வமாக வீடியோ வெளியிட்ட லாரன்ஸ், தனது தாயின் ஆசிர்வாதத்தோடு விரைவில் அரசியல் தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக சஸ்பென்ஸ் வைத்தார். அந்த சஸ்பென்ஸ் திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்டி என்பதுதான் என மீண்டும் ஒரு தகவல் உலா வந்தது.

அடுத்தடுத்து வீடியோ
மறுபடியும் 18 நிமிட வீடியோவில் ஓடி வந்த லாரன்ஸ், நண்பர் விஜய்யின் வெற்றியை பார்த்து தான் தன் தாயே தனது அரசியல் என்ட்ரிக்கு சரி என தலையாட்டி உள்ளதாகவும், நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? தனக்கு அதற்கான தகுதி இருக்கிறதா? இல்லையா? முடிவு உங்கள் கையில் என ரசிகர்களிடம் ஒரு வினாத்தாளை கொடுத்து மீண்டும் சஸ்பென்ஸை நீட்டித்தார்.

தெரு நாய்களுடன் ஒப்பீடு
இதனை தொடர்ந்து, அரசியல் பிரவேசம் குறித்து மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காக நடன கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருடன் உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார் லாரன்ஸ். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு திட்டங்களை பிஸ்கட் துண்டுகளாகவும், அந்த திட்டங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களை தெரு நாய்களாகவும் ஒப்பிட்டு பேசினார். இது பலரையும் கொந்தளிப்பில் ஆழ்த்த, அவரது அரசியல் வருகையே வேண்டாம் என்ற எதிர்ப்புக் குரல்களும் எழுந்தது.

நியாயம், தர்மம் பேசிய லாரன்ஸ்
அதற்கு, தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, மக்கள்தான் தனக்கு உயிர்மூச்சே எனக்கூறி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சி கிழக்கில் போட்டியிட போவதாக தகவல் வெளியானதில் இருந்தே பலரும் தன்னை ஆர்வமாக அரசியலுக்கு அழைப்பதோடு, ”நீங்கள் வெற்றிபெற நாங்கள் பொறுப்பு” என நம்பிக்கையாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனாலும் தர்மம் என்ற ஒன்று உள்ளதே என கூறிய லாரன்ஸ், திருச்சியில் நான் நிற்க வேண்டுமா? அல்லது முதலமைச்சர் விஜய் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானது முதல் அரசியலில் நுழைந்து முதலமைச்சராக ஆனதுவரை நேரங்காலம் பார்க்காமல் போஸ்டர் ஒட்டி கடுமையாக உழைத்தவர்கள் நிற்க வேண்டுமா? அதேபோல், திருச்சி கிழக்கிற்காக முதலமைச்சரின் வீட்டுவாசலில் எத்தனைபேர் காத்துக் கொண்டிருக்கிறார்களோ? அவர்களில் ஒருவருக்குகூட வாய்ப்பு கொடுக்கலாம்தானே? எனக் கூறினார்.

அரசியல் காய்கறிக்கடையா?
அது எப்படி? யாரோ விதைபோட்டு, செடியை வளர்த்து, வேலிகட்டி பாதுகாத்து, கடைசியில் மரமாகி பழம் காய்த்தால், அந்த பழத்தை நான் சாப்பிட வேண்டுமா? அல்லது விதை போட்டவர்கள் சாப்பிட வேண்டுமா? என சாந்தமாக பேசிய லாரன்ஸ், ஒரு கட்சியும் அப்படிதான் சென்றவுடனேயே பதவி கிடைத்துவிடாது, அதற்காக உழைக்க வேண்டும் என்றார்.

அவர் சொல்லுவதும் நியாயம்தானே? அப்படியானால் அண்ணன் அரசியலுக்கு வரவில்லைபோல என இந்த பேச்சை கேட்ட பலரும் முடிவு செய்ய, அதுதான் இல்லை திருச்சி கிழக்கில் தான் போட்டியில்லை, ஆனால் அரசியலுக்கு வரவுள்ளதாக பொடி வைத்து பேசினார். பொறுமையாக அடிமேல் அடி வைத்துதான் வர வேண்டும், சீக்கிரம் வர அரசியல் என்ன காய்கறிக்கடையா? யாருடன் சேர்ந்தால் நல்லது நடக்குமோ அங்குபோய் சேருவோம் எனக்கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.

எப்போது தான் வருவார்?
இந்த வீடியோவை பார்த்த பலரும், திருச்சி கிழக்கில் போட்டி என தகவல் பரவ ஆரம்பித்தபோது வெளியிட்ட முதல் வீடியோவிலேயே நான் போட்டியிடவில்லை, போஸ்டர் ஒட்டியவர்கள் தான் நிற்க வேண்டும், அதுதான் தர்மம் எனக்கூறாமல் தனது தாய் ஆசிர்வாதத்தோடு விரைவில் அறிவிப்பு எனக்கூறி சுற்றலில் விட்டது ஏன்? திருச்சி கிழக்கில் போட்டியில்லை எனக்கூறுவதற்கு ஏன் இத்தனை நாட்களும் இழுத்து கடத்த வேண்டும்? சிதறு தேங்காயை உடைப்பதுபோல எந்த கட்சி? எந்த தொகுதி? என கூறாமல் ஏன் இத்தனை வீடியோக்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதோடு, அரசியலுக்கு வரவுள்ளதாக கூறும் லாரன்ஸ், வேறு தொகுதியில் போட்டியிட்டால் மட்டும் அங்கு இதற்கு முன்பு போஸ்டர் ஒட்டியவர்கள் இருக்க மாட்டார்களா? ஒரு கட்சியில் உறுப்பினராகி கட்சிப் பணியாற்றி போஸ்டர் ஒட்டிதான் அரசியலுக்கு வரவுள்ளாரா? அப்படியானால், லாரன்ஸின் வருகை அடுத்த சட்டமன்ற தேர்தல் தானா? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.