ராணிப்பேட்டை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலையில் வேலைக்கு ஆள் எடுப்பதாக வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான தகவலை நம்பி ஏராளமான இளைஞர்கள் நகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. விசாரணையில் மேன்பவர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனம் போலீசிடம் சிக்கிய நிலையில், அது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.கடைசியில் கிடைத்தது...இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. இன்றுடன் எல்லா கஷ்டமும் தீர்ந்து விட்டது என, மனதில் பல கனவுகளை சுமந்து கொண்டு கால் கடுக்க காத்திருந்த இளைஞர்களுக்கு, கடைசியில் கிடைத்தது வெறும் ஏமாற்றம் மட்டுமே. டாடா நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் உற்பத்தி ஆலை ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் கடந்த வாரம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவின் போதே 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நேர்காணல் நடப்பதாக வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் பரவியது. என்ன வேலை? கல்வி தகுதி? போன்ற எதுவும் குறிப்பிடாமல் வெறுமனே டாடா நிறுவனத்தில் வேலை இருப்பதாக காட்டுத் தீ போல் தகவல் வேகமாக பரவியிருக்கிறது.போக்குவரத்து பாதிப்பு டாடா நிறுவனத்தில் வேலை, அதிலும் அடிப்படை தகுதிகள் எதுவும் குறிப்பிடாததால் ஆசையை வளர்த்து கொண்ட சோளிங்கர் இளைஞர்கள், வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குவியத் தொடங்கினர். BACHELOR டிகிரி முதல் BE, B.TECH என பொறியியல் முடித்த பட்டதாரிகள் வரை பலரும் பள்ளி முன்பு திரண்ட நிலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அப்போது திடீரென நகராட்சி அலுவலகத்தில் RESUME வாங்கப்படுவதாக மற்றொரு தகவல் பரவியது. அதையும் நம்பிய இளைஞர்கள் மொத்தமாக ஒரே நேரத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏற்பட்டது.தலையில் இடியை இறக்கியதுநூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி அங்கு கூடியிருந்த இளைஞர்கள் தலையில் இடியை இறக்கியது. தொடர்ந்து விசாரித்ததில், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ரோமன் குளோபல் எனும் மேன்பவர் சப்ளை செய்யும் நிறுவனம் வழக்கம் போல் இளைஞர்களிடம் இருந்து RESUME வாங்கியதும், அதேசமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலை என வாட்ஸ் அப்பில் அவர்கள் விளம்பரம் செய்யவில்லை என்பதும் தெரிய வந்தது.காவல்துறை அறிவுறுத்தல் இதையடுத்து, வாட்ஸ் அப்பில் தவறான தகவலை பரப்பியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதோடு, இது போன்று சமூக வலைதளங்களில் வரும் தகவலின் உண்மை தன்மையை ஆராயாமல், தங்களது விவரங்களை இளைஞர்கள் கொடுக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். Related Link தங்கம் விலையில் அதிரடி சரிவு