Also Watch
Read this
By: Manigandan Raja

நிலைமையை சமாளிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை :
ஆந்திராவில் நிலவும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடால் மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் பெரும்பாலானவை மூடப்பட்டதாக பரவிய தகவல்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பதற்றமான சூழலால் அச்சமடைந்துள்ள மக்கள் அதிகளவில் பெட்ரோல், டீசலை வாங்கி செல்பதால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் தொகை தொடர்பாக சந்திரபாபு நாயுடு பேச்சு :

ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது இரண்டு குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று கொள்வதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை தொடர்பாக பேசிய அவர், 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியதாகவும், 10 ஆண்டுகளில் அந்த இலக்கை அடைந்து வெற்றி கண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையில் சீனா மக்கள் தொகை குறைவை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாரா கிளைடிங் செய்த போது விபத்து :

இமாச்சலப் பிரதேசத்தின் குரன் தார் ((Guran Dhar)) பகுதியில் பாராகிளைடிங் செய்தபோது, விபத்தில் சிக்கிக் கொண்ட 2 விமானிகள், ஹெலிகாப்டர் உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக துணை ஆணையர் ஹேம்ராஜ் பைர்வா ((Hemraj Bairwa))தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அருண் சிங் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் மற்றொரு விமானி ரஞ்சன் குப்தா என்பவர் ஒரு மரத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விமானப்படை ஹெலிகாப்டரின் உதவியுடன் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாலம்பூரில் ((Palampur))உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முற்றிலும் பனியால் மூடப்பட்ட பீர் பஞ்சால் மலைத் தொடர் :

ஜம்மு-காஷ்மீரின் பீர் கி கலி ((Peer Ki Gali )) பகுதியில் அமைந்துள்ள பனி போர்த்திய பீர் பஞ்சால் ((Pir Panjal ))மலைத்தொடரின் அழகை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
சோபியான் மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள பீர் கி கலி பகுதி குளிர்காலத்தில், அடர்ந்த பனியால் போர்த்தப்பட்டிருக்கும். இந்த நிலையில் பீர் பஞ்சால் மலைத்தொடரின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்
காட்டுக்குள் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை :

கர்நாடகாவில் உள்ள காவேரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த போது காட்டுக்குள் இருந்து வந்த ஒற்றை யானை தாக்கியதில் ஒரு பெண் காயமடைந்தார். கனகபுரா மாவட்டம் சங்கம வனப்பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானையை பார்த்து அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர். அப்போது ஒரு பெண்ணை மட்டும் காட்டு யானை தாக்கிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.