Also Watch
Read this
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு காரணமான உள்ளடி வேலைகளை கண்டறிய திமுக தலைமை அமைத்த சிறப்பு கள ஆய்வு குழு நடத்திய அதிரடி ஆய்வின் விவரங்கள் தற்போது வெளியாகி அறிவாலயத்தையே சூடாக்கியிருக்கிறது. ஆய்வுக்குழுவினர் வெறும் மேலோட்டமான ஆய்வுகளை மட்டும் செய்யாமல், மாவட்டங்கள் வாரியாக நேரில் சென்று, கட்சி நிர்வாகிகளிடமும், அதிருப்தியில் இருந்த தொண்டர்களிடமும் முகம் பார்த்து பேசி, உண்மைகளை சேகரித்து தலைமையிடம் ஒப்படைத்துள்ளது. தொண்டர்களின் கண்ணீருக்குக் காரணம் என்ன? தேர்தல் செலவுக்காக கட்சித் தலைமை வழங்கிய பல கோடி ரூபாய் என்ன ஆனது?

திமுக தோல்விக்கு காரணம்...
திமுக தோல்வியின் காரணத்திற்கு, சொகுசாக வாழ்ந்து வரும் உங்கள் உடன்பிறப்புகளிடமே கேளுங்கள் என முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அக்கட்சியின் கள ஆய்வு முடிவில் பல தொண்டர்களின் மனக்குமுறல் அதுவாகவே இருந்திருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் எவரும் எதிர்பார்க்காத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோட்டையை தக்கவைப்போம் என்று கணக்கு போட்ட திமுக தலைமைக்கு, தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து மிக பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறது.
இந்த தோல்விக்கு பின்னால் உள்ள கசப்பான உண்மைகளை சொல்லும் கள ஆய்வு அறிக்கை, தற்போது அறிவாலயத்தையே அதிர வைத்துள்ளது.

நீங்கள்தான் முதலமைச்சர்
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவு வரை, அறிவாலயத்தின் டாப் லெவல் கேபினட்டில் கொண்டாட்ட மனநிலைதான் இருந்தது. சபரீசன் டீம் கொடுத்த 12 தொடர் சர்வேகளும், தலைவரே... கவலையே படாதீங்க, மினிமம் 120, மேக்சிமம் 140 சீட் கன்பார்ம் மீண்டும் நீங்கள்தான் முதலமைச்சர் என மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால், கள நிலவரம் வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. புதுமைப் பெண், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சுமார் 3 கோடி வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று தலைமை கணக்கு போட்டது. ஆனால், அந்த திட்டங்களால் பயனடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே தவெகவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டது, திமுகவின் VOTE BANK சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

திமுகவில் 70 வயதை கடந்தவர்களே...
இந்த சூழலில்,38 பேர் அடங்கிய திமுகவின் சிறப்பு கள ஆய்வு குழு, 25 மாவட்டங்களை அலசி ஆராய்ந்து ஸ்டாலினிடம் கொடுத்திருக்கும் அந்த அறிக்கை, திமுகவின் மாவட்டச் செயலாளர்களின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறது. அந்த அறிக்கைகளில், திமுகவின் தோல்விக்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளே காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றன. தவெக தனது வேட்பாளர் பட்டியலில் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த நிலையில், திமுகவில் 70 வயதை கடந்தவர்களே மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

தலைமை கொடுத்த கோடிக்கணக்கான ரூபாயை...
மாவட்டங்களில் தகுதியான இளைஞர் அணியினருக்கு சீட் கொடுத்தால், தங்களின் வாரிசுகளின் அரசியல் எதிர்காலம் பாழாய் போய்விடும் என்று பயந்த மாவட்டச் செயலாளர்கள், இளைஞர்களை திட்டமிட்டே ஓரங்கட்டி, சீட்டுகளை முடக்கியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, தேர்தல் செலவுக்காக கட்சி தலைமை கொடுத்த கோடிக்கணக்கான ரூபாயை, மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் அப்படியே அமுக்கிவிட்டதாக தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

முகத்தில் அடித்தாற்போல்...
மாவட்டங்களில் இருக்கும் இந்த நிர்வாகிகள் தங்களை ஏதோ குறுநில மன்னர்கள் என்று நினைத்துக் கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். தங்களை சுற்றியுள்ள தொண்டர்களை ஒரு துரும்பாக கூட மதிக்காதது, தன்னை தவிர வேறு யாரும் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்ற அடக்குமுறை மற்றும் சாதியை பார்த்து நிர்வாகிகளை மாவட்டங்களில் நியமனம் செய்வது என இதுபோன்று வித விதமான புகார்கள் எழுந்துள்ளது. கள ஆய்வு குழுவிடம் பேசிய பல மாவட்ட நிர்வாகிகள், இந்த கட்சியில உழைச்சதுக்கு எந்த மரியாதையும் இல்ல, கையில் இருந்த பணம் இழந்ததுதான் மிச்சம் என்று கண்ணீரோடு தங்களது ராஜினாமா கடிதத்தை முகத்தில் அடித்தாற்போல் கொடுத்துவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

கண்டு கொள்ளவில்லை
2021 தேர்தல் வெற்றிக்கு முன்னால், கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக அரசுக்கு எதிராக கோடிக்கணக்கில் செலவு செய்தும், போராட்டங்கள் நடத்தியும் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்திய உண்மையான நிர்வாகிகள் கைவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக கணத்த இதயத்தோடு, ஸ்டாலினை சந்தித்து முறையிட சென்ற நிர்வாகிகளை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு, அறிவாலயத்தில் இருந்த தலைமை நிர்வாகிகள் அவர்களை கண்டு கொள்ளவில்லை என புலம்பி தள்ளியிருக்கின்றனர்.

சாதி ரீதியாக நிர்வாகிகளை...
இனிமேல் அடுத்த 5 வருஷம் தெருவில் இறங்கி போராட எங்க உடம்புல தெம்பும் இல்ல, கையில் காசும் இல்லை என்று தொண்டர்கள் அழுது புலம்பியதை அப்படியே ஆடியோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து ஸ்டாலினின் டேபிளுக்கு அனுப்பியிருக்கிறது கள ஆய்வு குழு. திமுக தலைமைக்கு வந்துள்ள இந்த அறிக்கையில் மிக முக்கியமான அதிர்ச்சி தகவலாக, சில அமைச்சர்களே தங்களுக்கு வேண்டப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு பக்கபலமாக நின்று, சாதி ரீதியாக நிர்வாகிகளை நியமித்ததாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் சிலர் சாதிப் பாகுபாடு பார்த்து, தங்கள் சாதி சார்ந்த மாவட்டச் செயலாளர்களை காப்பாற்றுவதிலும், அவர்களுக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக போடுவதிலும் மட்டுமே குறியாக இருந்துள்ளனர். இந்த செயலாளர்கள் தங்களை குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு, சாதி பார்த்து நிர்வாகிகளை நியமிப்பதும், மற்றவர்களை ஓரங்கட்டுவதும் என இவர்களின் அராஜகம் எல்லையை கடந்திருக்கிறது.

அதிரடி ஆப்ரேஷன்
குற்றம் சாட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தப்பிப் பிழைக்க வேண்டுமானால், அதிரடி ஆப்ரேஷன் செய்தே தீர வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது தலைமை.

அதனால்,கட்சியின் பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் என சீனியர்கள் பலரின் பதவிகள் பறிக்கப்பட்டு, இளைஞர் அணியினருக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் பகிர்ந்தளிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved