Also Watch
Read this
சென்னை, வேளச்சேரியில் ஒரே வீட்டை லீசுக்கு காட்டி 80க்கும் மேற்பட்டோருக்கு அல்வா கொடுத்த மோசடிக்காரனை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்த பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மோசடிக்காரனை பக்குவமாக அனுப்பி வைத்துவிட்டு, பரிதவிக்கும் தங்களை பார்த்து வேளச்சேரி போலீசார் ஏளனமாக சிரிப்பதாக கொந்தளித்த பாதிக்கப்பட்டவர்கள், 4 ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தனைபேர் தங்கள் பணத்தை இழந்திருக்க மாட்டார்கள் எனவும் ஆதங்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் ஆதங்கம்
ஒரே வீட்டை காட்டி 4 ஆண்டுகளாக மோசடி வேலையில் ஈடுபட்ட இந்த மோசடிக்காரனை கைது செய்யாத வேளச்சேரி காவல்துறையை பார்த்துதான் மக்கள் சிரிக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத வேளச்சேரி போலீசார் தங்களை பார்த்து ஏளனமாக சிரிப்பது வேடிக்கையாக உள்ளது என்பதே இந்த மக்களின் ஆதங்கம்.

முக்கிய குற்றவாளி எங்கே?
சென்னை, வேளச்சேரியில் ஒரே வீட்டை லீசுக்கு காட்டி ஊடகவியலாளர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோரிடம் லட்சங்களில் பணம் பெற்று கோடிகளை சுருட்டிய கேடி கும்பலை சேர்ந்த முசாமில் ஷெரீப் மற்றும் அவரது நண்பர் இம்ரான் கான் ஆகிய இருவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். ஆனால், மோசடியின் முக்கிய புள்ளியான அக்பர் ஷெரீப்பை தற்போதுவரை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் கொந்தளித்த பாதிக்கப்பட்ட அனைவரும் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்காக வந்தனர். அவர்களை, உள்ளே விடாமல் போலீசார் தடுத்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதன்பிறகு சிலரை மட்டும் உள்ளே அழைத்து காவல் ஆணையரிடம் பேச வைத்ததாக தெரிகிறது.

நான்கு ஆண்டுக்கு முன்னரே...
இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு காவல் ஆணையரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தவர்கள், வெளியே வந்து வேளச்சேரி காவல் நிலைய போலீசார் மீதான தங்கள் மனக்குமுறல்களையும் கொட்டினர். 4 ஆண்டுக்கு முன்பே அக்பர் ஷெரீப், பெரிய டீமையே வைத்துக்கொண்டு வீடு லீஸ் மோசடியில் ஈடுபட ஆரம்பித்து உள்ளதாகவும், அப்போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனைபேர் ஏமாந்திருக்க மாட்டார்கள் என்றும் பணம் கொடுத்தவர்கள் அனைவருமே வசதி படைத்தவர்கள் இல்லை, வாடகை கொடுக்க முடியாமல் நகைகளை அடகு வைத்தும், விற்றும் கொடுத்துள்ளதாக கூறினர்.

இழந்த பணத்தை மீட்க கமிஷன்
வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதா? அல்லது கடனை அடைப்பதா? என வருத்தம் தெரிவித்த பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சப்போர்ட் இல்லாமல் இந்த மோசடியை செய்திருக்க முடியாது எனவும் 4 ஆண்டுகளாக வேளச்சேரி காவல்துறையினர் தூங்கி கொண்டிருந்தார்களா? எனவும் ஆவேசமாக பேசினர்.

ஏதோ நாங்கள் தான் மோசடி செய்ததுபோல வேளச்சேரி காவல்துறையினர் தங்களை பார்த்து கிண்டலாக சிரிப்பதாகவும், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெறும் 100 மீட்டர் இடைவெளியில் உள்ள வீட்டை காட்டித் தான் இத்தனை ஆண்டுகள் இத்தனைபேருக்கு விபூதி அடித்துள்ளதாகவும், அப்படி இருக்கும்போது இந்த மோசடி போலீசுக்கு தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாது இழந்த பணத்தை மீட்டுத்தர போலீசார் கமிஷன் கேட்பதாகவும் கவலை ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்த நொடியே மிரட்டல்
தன்னை சிறையில் தூக்கிப்போட்டாலும் சரி, வெட்டியே போட்டாலும் சரி வேளச்சேரி போலீசார்தான் மோசடிக்கே உடந்தை என வெகுண்டெழுந்த பாதிக்கப்பட்டவர்கள், ஏமாந்த நாங்கள் வேதனையில் இருக்கிறோம், ஏமாற்றியவர்களை பக்குவமாக தப்பிக்க விடுவதா? எனவும் கொந்தளித்தனர்.

அதேபோல், மோசடிக்காரன் மீது புகார் அளித்த அடுத்த நொடியே சம்மந்தப்பட்ட மோசடிக்காரனே தன்னை அழைத்து மிரட்டுகிறான் என்றால் போலீசார் தகவல் கொடுக்காமலா இது நடக்கும்? என ஆத்திரப்பட்ட பணத்தை இழந்தவர்கள், ஏமாற்றுக்காரனை கண்ணுக்கு முன்னால் காண்பித்தும் வேளச்சேரி போலீசார் வேடிக்கை பார்த்தாக குற்றம்சாட்டினர்.

அதிரடி நடவடிக்கை
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான பிறகுதான் இருவரையே போலீசார் கைது செய்ததாக கூறிய பாதிக்கப்பட்டவர்கள், ஏமாற்றுக்காரர்கள் தைரியமாக இருப்பதாகவும் பணத்தை இழந்த நாங்கள் தான் பரிதவிப்பில் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

மோசடி திமுக ஆட்சியில்தான் நடந்தது என்பது மறுப்பதற்கில்லை, ஆனால் சினிமாவில் வருவதுபோன்று தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் விஜய், இதற்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved