Also Watch
Read this
யாருடன் கூட்டணி என்பதை தெளிவாக கூறாமல் குழப்பும் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இணைந்ததாக அர்த்தம் இல்லை என்றும் கூறி உள்ளார்.

ரீல்ஸ் வாடிக்கையாகி விட்டது
இதுகுறித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
அமைச்சர்கள், அதிகாரிகள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. குறிப்பிட்ட ஒருவர் தான் அப்படி செயல்படுகிறார் எனக் கூறமுடியாது. சமூக ஊடகங்கள், வலிமையாக உள்ள இந்த சூழலில் , ஒவ்வொரு அசைவையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. இது, பொது ஒழுங்கிற்கு கேடாக அமைந்தால் சுட்டிக் காட்டுவோம். அமைச்சர்கள் இதனை உள்வாங்கிக் கொள்வார்கள் அல்லது தேவைப்பட்டால் தவிர்ப்பார்கள் என நம்புகிறேன்.

தவெகவில் இருந்து கடிதம்
அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே, இன்னொரு கூட்டணியில், தவெகவில் இடம் பெற்று விட்டோம் என்பது பொருளல்ல. ஆட்சி அமைக்க 2 இடங்கள் பற்றாக்குறையாக உள்ளதால், விடுதலைச்சிறுத்தைகள் ஆதரவு தர வேண்டும் என்று, முதல்வர் விஜய் தரப்பில் இருந்து, வெளிப்படையாக கடிதம் வந்தது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அப்படித்தான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக கூறினோம். பத்து நாட்கள் கழித்து தான் அமைச்சரவையில் இடம் பெறுவது என்ற முடிவை எடுத்தோம்.

விஜய் தலைமையில் கூட்டம்
இந்த சூழ்நிலையில், பத்திகையாளர்களை சந்தித்தபோது, ‘இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறீர்களா?’ என கேட்டனர். அதற்கு, ‘ஆம், திமுக கூட்டணியில் தொடர்கிறோம்,’ என்று நான் கூறினேன். ஜூலை ஒன்றாம் தேதி கூட்டணி தொடர்பாக, ஆதரவு நல்கிய கட்சிகளுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. எனவே, தவெக தலைமையில் கூட்டணி அமையவில்லை என்று தான் பொருள்.

விசிக மீது விமர்சனம்
அமைச்சரவையில் இடம்பெற்ற உடனேயே திமுகவுக்கு நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் எனப் பலரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு விடை கூறக் கூடிய வகையில் தான், நான் பதில் கூறினேன். பதவி என்ற உடன் ஒரு கூட்டணியை உதறிவிட்டு ஓடி விடவில்லை.

உறவு, நட்பு தொடர்கிறது
எடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றையும் கூட்டணி தலைமையிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். ஸ்டாலினை சந்தித்தும் பேசி உள்ளோம். இதைத்தான் நான் சொன்னேன். திமுக உடனான உறவு தொடர்கிறது, நட்பு தொடர்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.