Also Watch
Read this

ஆந்திராவின் போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சர்வதேச விமான நிலையம்...
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், போகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம் நாளை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.
வடக்கு ஆந்திராவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்...
இந்த விமான நிலையம், சர்வதேச அளவிலான பெரிய ரக விமானங்களும் வந்து செல்லும் வகையில் 3,800 மீட்டர் நீளமுடைய ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டாலும், இதற்கான முழுமையான வர்த்தக ரீதியான பயணிகள் விமான போக்குவரத்து ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.

சுமார் 4,700 கோடி ரூபாயில்...
இதன் திட்ட மதிப்பு சுமார் 4,727 கோடி ரூபாய் ஆகும். ஜி.எம்.ஆர். குழுமத்தால் அரசு, தனியார் பங்களிப்பு முறையில், மிக விரைவாக 31 மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆண்டுக்கு 60 லட்சம் விமான பயணிகளைக் கையாளும் வகையில், இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், ஆண்டுக்கு 4 கோடி பயணிகள் வரை கையாளும் வகையில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

தொழில் வளர்ச்சி...
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் உள்ள தற்போதைய INS தேகா சிவில் விமான நிலையத்தின் வர்தக ரீதியான விமான சேவை அனைத்தும் இந்த புதிய போகபுரம் விமான நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையம் மூலம் விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வட ஆந்திர பிராந்தியத்தின் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என கணிக்கப்பட்டு உள்ளது.


