Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆரை விமர்சித்து பேசிய சீமானுக்கு, அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விஜய் மாற்றம் குறித்து சொல்லவே இல்லை. அவர் திமுகவில் இருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சி போட்டு உப்புமா கிண்டி விட்டார்," என்றார்.
"ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வரப்போகிறது. இது ஒரு சனியன், அது ஒரு சனியன். இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டை தைத்து விட்டார். சனிக்கிழமை கிளம்பி விட்டார். மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம் வரும் என்பதை அவர் சொல்லவே இல்லை” என சீமான் பேசினார். .
இந்நிலையில், சீமானின் இந்த பேச்சுக்கு அதிமுக கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக மாநில ஐடி விங் செயலாளார் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “அண்ணா, எம்ஜிஆர் பற்றி பேச சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது. மறைந்த தலைவர்களை பற்றி எப்படி பேச வேண்டும் என்ற நாகரீகம் கூட சீமானுக்கு இல்லை. பிரபாகரன் பெயரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி திரள் நிதி சுருட்டும் சீமானுக்கு, எம்ஜிஆர் என்ன செய்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரியும். வாய்க்கொழுப்பில் சீமான் தலைவர்களை விமர்சித்தால் அதிமுக சும்மா இருக்காது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved