Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் குறித்து, ஒருமையில் பேசி, தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆய்வுக்கு சென்ற இடத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

நான் காவல் வாகனத்தில் வரமாட்டேன், சொந்த வாகனத்தில்தான் வருவேன், வேண்டுமானால் இன்ஸ்பெக்டரும் எனது வாகனத்தில் வரட்டும் என கட்டளைபோட்டு அடம்பிடித்த அனிதா ராதாகிருஷ்ணனை, முன்ஜாமின் மனு தள்ளுபடியான 90 நிமிடங்களிலேயே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஏழாவது முறை எம்எல்ஏ
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், திமுகவை சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 6 முறை எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோதிலும் அனிதா ராதாகிருஷ்ணன் பெரிய அளவில் செய்தியாளர்களை சந்தித்ததோ அல்லது கட்சி கூட்டங்களில் நீண்டநேரம் பேசியதோ இல்லை. ஆனால், நடந்து முடிந்த தேர்தலுக்குப்பிறகு ஆர்வமாக செய்தியாளர்களை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவிற்கு வாக்களித்த வாக்காளர்களையும் அவதூறாக பேசி வாண்டடாக சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சர்ச்சை பேச்சு
அப்படி ஒரு சர்ச்சை பேச்சுதான், தற்போது அவரை கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த ஜூன் 20ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது மேடையில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதோடு நடிகையுடன் ஒப்பிட்டு தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

தரம் தாழ்ந்த பேச்சு, புகார்
இதுகுறித்து, தவெக ஆத்தூர் நகர செயலாளர் செல்வம் என்பவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் அனிதா ராதாகிருஷ்ணன். இதனை விசாரித்த நீதிபதி, 1967ஆம் ஆண்டுக்குப் பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள், நாம் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தோம், ஒரு முன்னாள் அமைச்சரும், 7 முறை எம்எல்ஏவாகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சரை மரியாதையாக பேச வேண்டும் என்பது தெரியாதா?

முன் ஜாமின் தள்ளுபடி
ஏன் இதுபோன்ற மொழியில் பேச வேண்டும்? என கடிந்து கொண்டதோடு அவரது முன் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட சிறிதுநேரத்திலேயே அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர் காவல்துறையினர்.

ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் தலைமையிலான போலீசார் கைது செய்வதற்காக சென்றனர். தனது அட்வகேட் வரட்டும், அப்போதுதான் வருவேன், இல்லாவிட்டால் இடத்தைவிட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்த அனிதா ராதாகிருஷ்ணனிடம், முன்ஜாமின் மனு தள்ளுபடியாகி விட்டது என்ற விவரத்தை எடுத்துக்கூறி காவல் வாகனத்தில் ஏறுமாறு போலீசார் கூறினர்.

”கைது செய்யப்பட்டார் அனிதா ராதாகிருஷ்ணன்”
அதன்பிறகு, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், புகார் கொடுத்த செல்வம் எந்த ரூட்டில் சென்றாலும் அந்த ரூட்டை எல்லாம் பிளாக் செய்யுங்கள் என தனது ஆதரவாளர்களுக்கு கட்டளை போட்டதோடு, செய்தியாளர்களை பார்த்து ”கைது செய்யப்பட்டார் அனிதா ராதாகிருஷ்ணன்” என செய்தி போட்டுக்கொள்ளுமாறு கிண்டலடித்தார். அதனைக்கேட்டு சுற்றி இருந்தவர்களும் சிரித்தனர்.

திமுகவினர் போராட்டம்
அதன்பிறகு காவல் வாகனத்திற்கு வருமாறு இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் அழைக்க, தனது காரில்தான் வருவேன், நீங்களும் வேண்டுமானால் என் காரிலேயே ஏறிக்கொள்ளுங்கள் என ஆர்டர் போட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த ஜம்பம் எதுவும் எடுபடாத நிலையில் முன்ஜாமின் மனு தள்ளுபடியான 90 நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டார் அனிதா ராதாகிருஷ்ணன்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ”தமிழக காவல்துறை ஒழிக, தவெக அரசு ஒழிக” என முழக்கமிட்டு அனிதா ராதாகிருஷ்ணனை காரில் ஏறவிடாமல் தடுத்தனர். காவல் வாகனத்தின் முன்னால் அமர்ந்தும், பேருந்துகளை வழிமறித்தும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது, நீதிமன்றத்தில் ஆஜர்
இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 2 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. அங்கும் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்து அனிதா ராதாகிருஷ்ணனை பார்க்க வேண்டும் எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதற்குமத்தியில், கைதுக்குமுன் வழக்கமாக மேற்கொள்ளப்படும் உடல் பரிசோதனையை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 4 பேர்கொண்ட மருத்துவ குழுவினர் செய்தனர். அதன்பிறகு 6 மணிநேரம் நடந்த விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டார் அனிதா ராதாகிருஷ்ணன்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதுஒருபுறமிருக்க, அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெகவை ‘Take Diversion’ அரசு எனவும் சினிமா ஆக்சன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டு இருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், திருவைகுண்டம் தவெக MLA மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரில் காட்டாத அவசரத்தை, ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்வதில் மட்டும் காட்டுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சர்வாதிகாரத்தின் உச்சம்
அதேபோல், அவதூறு வழக்குகளில் ஜெயலலிதாவே செய்யத் துணியாததை முதலமைச்சர் விஜய் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும் தெரிவித்துள்ளார்.