Also Watch
Read this

வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஒடிசா, மேற்கு வங்கக் கடற்கரைப் பகுதிகளில் உருவான காற்றழுத்தம் அதே இடத்தில் நீடிக்கிறது. அடுத்த 2 முதல் 3 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இரு நாட்களுக்கு, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதொடர்பாக, வானிலை மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;
ஜூலை 2ஆம் தேதி, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஜூலை 3ஆம் தேதி, காலை நிலவரப்படி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 நாள்களில் மேலும் வலுப்பெறக்கூடும்.

மழை வாய்ப்பு
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை, காரைக்காலில் 2 நாட்களுக்கு இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...
சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை நீலகிரி, கன்னியாகுமரின் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். கோயம்பத்தூர் , நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்காக...
ஆந்திர கடலோரப்பகுதி, மத்திய வங்கக்கடலின் அநேக பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.