Also Watch
Read this
அவதூறு வழக்குகளில் ஜெயலலிதாவே செய்யத் துணியாததை முதலமைச்சர் விஜய் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்து உள்ளார். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும் கூறி உள்ளார்.

பொறுப்பற்ற பேச்சு
இதுதொடர்பாக, ஆர்.எஸ்.பாரதி கூறி இருப்பதாவது;
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில், பொறுப்பற்ற முறையில் பேசியது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரம் ஏற்படக்கூடிய வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி உள்ளார்.
கரூரில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி, அவர் பொய்யும் புரட்டுமாகப் பேசி உள்ளார். கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியிலேயே சேர்ந்துவிட்ட காரணத்தினால், கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அந்தத் தொகுதி மக்களுடைய கவனத்தை திசை திருப்புகிற நோக்கத்தில் அவ்வாறு பேசி உள்ளார்.

ஓடிப் போய் ஒளிந்து கொள்ளவில்லை
கரூர் சம்பவத்தின்போது, ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மனசாட்சி உள்ளவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், நாகரிகம் அறிந்தவர்கள் என அத்தனை பேருமே பாராட்டினார்கள். விஜய்யைப் போல 41 பேர் இறந்தபோது முகத்தை மூடிக்கொண்டு ஓடிப் போய் ஒளிந்து கொள்ளவில்லை. ஸ்டாலின் அன்று மக்களோடு துணை நின்றார். உயிர்களைக் காப்பாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எல்லாம் உடனடியாக எடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றினார் என்பதை அந்தப் பகுதி மக்களும் மறக்க மாட்டார்கள், தமிழ்நாடும் மறந்திருக்காது.

இதுவே சாட்சி
கரூர் வழக்கை விசாரிப்பதற்கு, எஸ்ஐடி அமைத்து அதன் தலைவராக யாரை அன்று நாங்கள் நியமித்தோமோ, அதே காவல்துறை அதிகாரியை தான் இன்று மிக முக்கிய பொறுப்பான உளவுத்துறை ஐஜி ஆக நியமித்து உள்ளனர். ஆக நடுநிலையோடு தான் கடந்த திமுக அரசு நடந்து கொண்டது என்பதற்கு இதுவே சாட்சி. நாங்கள் அமைத்த எஸ்ஐடி குழுவின் விசாரணை ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் இவர்களே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். சிபிஐ விசாரணையும் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி...
கரூர் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் நேற்றைக்கு பேசிய ஆதவ் அர்ஜுனா. அவர்தான் மெயின் அக்யூஸ்ட். ஆதவ் அர்ஜுனா சட்டம் தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கை புரிந்து கொள்ளாமல் பேசிக்கொண்டு உள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக்கு விஜய் இரண்டு முறை போய் வந்தார். புஸ்ஸி ஆனந்த் , நிர்மல் குமார், முதல்வரின் தனிச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் , ஆதவ் அர்ஜுனா என இவர்கள் எல்லாம் ஏ1, ஏ2, ஏ3 என அக்யூஸ்ட லிஸ்ட்டில் உள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்கிற போது வழக்கை பற்றி ஒரு அக்யூஸ்ட், வழக்கின் விசாரணையை கெடுக்கிற வகையில் பேசி இருக்கிறார். ஆகவே இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது
முன்னாள் அமைச்சர் தற்போதைய எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அவரது தொகுதியிலே ஆய்வுக்கு போகிறபோது கைது செய்திருக்கின்றனர் என்றால் இது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை நிச்சயமாக சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம்.
இந்த அராஜகத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம். இந்த ஆட்சி எத்தனை நாளுக்கு என்பதை பொது மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பணியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. திமுக வெட்ட வெட்ட துளிர்க்கிற மரம், அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம், தீட்ட தீட்ட ஒளிர்கிற வைரம் என்பதை இன்றைக்கு புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிற புதியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.