Also Watch
Read this
கரூரில் சாலையே போடாமல் கோடிக் கணக்கில் பணம் கைமாறிய டெண்டர் முறைகேடு வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையின் கைது நடவடிக்கையை முன்கூட்டியே மோப்பம் பிடித்த எ.வ.வேலு, சம்மன் கையில் கிடைப்பதற்கு முன்பே நெஞ்சு வலி சிகிச்சைக்காக அவசர அவசரமாக சிங்கப்பூருக்கு விமானம் ஏறியிருக்கிறார். இது நிஜமான இருதய சிகிச்சை தானா, அல்லது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பயந்து வெளிநாட்டில் ஆடிய தலைமறைவு நாடகமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கமிஷன், கலெக்சன்...
பொதுவாக, தமிழ்நாட்டில் சாலை டெண்டர் என்றாலே கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பது எழுதப்படாத விதி. ஆனால், இந்த முறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் இலாகாவில் நடந்திருக்கும் விவகாரம், வைகைப்புயல் வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடியையே மிஞ்சிவிட்டது. ரோடு போட டெண்டர் விட்டோம், பணமும் செட்டிலாகிடுச்சு. ஆனா, அங்க ரோட்டையே காணோம் என்று கரூர் மக்கள் தலையில் துண்டை போட்டு கொண்டு புலம்பிய கதையை தான், அறப்போர் இயக்கம் ஆதாரத்தோடு தோண்டியெடுத்து இப்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் கையில் ஒப்படைத்துள்ளது.

இரவோடு இரவாக ரோடு...
கரூர் மாவட்டத்தின் ஈசா நத்தம் சாலை விவகாரத்தில், சாலையே போடாமல் ஒப்பந்ததாரர்களுக்கு முதல் தவணையாக 2 கோடியே 12 லட்சம் ரூபாயும், 2ஆவது தவணையாக 1 கோடியே 26 லட்சம் ரூபாயும் செட்டிலாகியிருக்கிறது. சங்கர் ஆனந்த் என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கே கரூரில் உள்ள 30 டெண்டர்களில் 20 டெண்டர்கள் அள்ளிக்கொடுக்கப்பட்டதன் பின்னணியில், எ.வ.வேலுவின் ஆசி பக்கா காப்பீடாக இருந்திருக்கிறது என்கிறார்கள். அப்போதே புகார்கள் எழுந்தாலும், ஒரு எஃப்.ஐ.ஆர் கூட போட விடாமல் பவர்ஃபுல் புள்ளியாக வேலு பார்த்துக் கொண்டாராம். ஆனால், அறப்போர் இயக்கம் விடாமல் துரத்தியதால், வேறு வழியின்றி அவசர அவசரமாக போலீஸ் பாதுகாப்போடு இரவோடு இரவாக அங்கே ரோடு போட்டு, தங்களின் தவற்றை பூசி மெழுக பார்த்திருக்கிறார்கள்.

எ.வ.வேலுவுக்கு சம்மன்
ஆனால், சட்டம் தன் கடமையை செய்ய தவறுவதில்லை என்பது போல, லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 25ஆம் தேதி, தமிழகம் முழுவதும் வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை, கரூர் உள்ளிட்ட 20 இடங்களில் அதிரடி ரெய்டு வேட்டையை நடத்தியது. இதில், 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க், சிஸ்டம் உள்ளிட்ட டிஜிட்டல் சான்றுகள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அள்ளிச் செல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட இந்த திடுக்கிடும் ஆவணங்களின் அடிப்படையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் எ.வ.வேலு
இங்கு தான் அரசியல் திருவிளையாடல் அரங்கேறியிருக்கிறது. விசாரணை தீவிரமடைவதையும், லஞ்ச ஒழிப்புத்துறையின் கைது அஸ்திரத்தையும் முன்கூட்டியே மோப்பம் பிடித்த எ.வ.வேலு, சம்மன் கையில் கிடைப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே அவசர அவசரமாக சிங்கப்பூருக்கு விமானம் ஏறிவிட்டார். இப்போது அரசியல் வட்டாரத்தில் எழும் மில்லியன் டாலர் கேள்வி இதுதான். எ.வ.வேலு போனது மருத்துவ சிகிச்சைக்கா? அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பயந்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த தலைமறைவு நாடகமாடுகிறாரா? என கேள்வி எழுந்திருக்கிறது. வழக்குக்கு பயந்து கொண்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் எ.வ.வேலு.

கைப்பட எழுதிய கடிதம்
வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய முன்னாள் அமைச்சர் வராததால், அவரது வழக்கறிஞர்கள் பட்டாளம் ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி எ.வ.வேலு கைப்பட எழுதி அனுப்பிய விளக்க மனுவை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, கால அவகாசம் கேட்டு இருக்கின்றனர். அந்த மனுவில், நான் ஜூன் 27 முதல் சிங்கப்பூரில் உள்ள லைஃப்லைன் ஹார்ட் சென்டரில், டாக்டர் ஜெயராம் லிங்கமநாயக்கர் மேற்பார்வையில் இருதய தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் 10 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வந்தவுடன் முழு ஒத்துழைப்பு தருகிறேன் என உருகியிருக்கிறார் வேலு.

சமூக வலை தளத்தில்...
இந்த நெஞ்சு வலி செண்டிமெண்ட் கடிதத்தை பார்த்த நெட்டிசன்கள், வழக்கு வந்தாலே அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வந்துடுமே, இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க முடியும்? என்று கமெண்ட்களை தட்டி விடுகிறார்கள். நெருக்கடி முற்றுவதால், தலைமறைவாக உள்ளார் என்ற கேள்விக்கு ஆளாகியிருக்கும் எ.வ.வேலு எப்போது தமிழகம் திரும்புவார், லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? அவர் எவ்வளவு தூரம் ஓடி ஒளிந்தாலும், மீண்டும் சம்மன் அனுப்பி, சட்டப்படி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவோம் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கறாராக தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை முறைகேட்டின் இந்த ரூட் மேப் எங்கே போய் முடியப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.