Also Watch
Read this
By: Web Team

திருச்சியில் தொடங்கும் அனைத்தும் திருப்புமுனையாக அமையும் என்றும், ஜனநாயகப் போருக்கு செல்லும் முன், மக்களை சந்தித்துவிட்டு செல்ல வந்திருப்பதாகவும் பொது மக்களிடையே விஜய் உரையாற்றி உள்ளார்.
திருச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
அந்தக் காலத்தில், குல தெய்வ கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான், அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன்.
எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணா அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண். தந்தை பெரியாருடைய இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். திருச்சிக்கென்று சிறப்பு வரலாறு உள்ளது.

டீசல் விலை 3 ரூபாய் குறைப்பு, மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது? வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? அரசு உதவியை செய்துவிட்டு, மக்களை கொச்சைப்படுத்துகிறது. மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? சொன்னீர்களே, செய்தீர்களா?
இவ்வாறு விஜய் பேசினார்.
உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டும், கிட்னி திருட்டு விவகாரம் குறித்தும் விஜய் கேள்வி எழுப்பினார்.

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை.
இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை, தவெக தலைவர் விஜய் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved