Also Watch
Read this
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. டீக்கடை உள்ளிட்ட சிறிய வகை உணவகங்களும் மூடப்பட்டதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

மேற்காசிய போர்ச்சூழல்
மேற்காசியாவில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ள சூழ்நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை சீரடையாமல் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் உணவகங்கள் இன்று மார்ச் 10ஆம் தேதி முதல் மூடப்படும் சூழல் நிலவுவதாக பெங்களூரு உணவக சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கை; பெங்களூரு உணவகங்களுக்கான வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில்கள், பொது மக்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் அன்றாட உணவுக்கு உணவகங்களை நம்பி உள்ள மாணவர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

கேஸ் விநியோகம் பாதிப்பு
இந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ள வர்த்தக எரிவாயு சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல சீரடையவில்லை என்றால் ஹோட்டல் உள்ளிட்ட உணவகம் சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிப்படையும். 70 நாட்களுக்கு சிலிண்டர் விநியோகம் சீராகாது என்று, எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் துறை சார்ந்த அமைச்சகம், அரசு, மக்கள் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விநியோகம் நிறுத்தம்
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60ம், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.114.50ம் என விலை உயர்ந்தது. இந்த நிலையிலும், பெங்களுருவில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. தட்டுப்பாடு காரணமாக, உணவகங்களுக்கு சிலிண்டர் விநியோகம் பெங்களுருவில் நிறுத்தப்பட் உள்ளது. நாடு முழுவதும் இந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கூறி உள்ளனர். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved