Also Watch
Read this
காசோலை மோசடி வழக்கில் களவாணி பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னர் வகையறா படத்திற்கு வாங்கிய கடனுக்கான காசோலை வழக்கில் சென்னை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ரூ.4.5 கோடி காசோலை
இந்த வழக்கு, நடிகர் விமல் தயாரித்து நடித்த ’மன்னர் வகையறா’ திரைப்படத்தின் தயாரிப்பு காலத்தில் ஏற்பட்ட நிதி பிரச்சனையை மையமாகக் கொண்டது. படத் தயாரிப்புக்காக, பைனான்சியரிடம் இருந்து பெருமளவில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த தொகையை திருப்பி செலுத்துவதற்காக 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை நடிகர் விமல் வழங்கியதாகவும், பின்னர் அந்த காசோலை வங்கியில் செலுத்தப்பட்ட போது, போதுமான அளவு பணம் இல்லாத காரணத்தால், திரும்பி வந்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

காசோலை மோசடி புகார்
இதனை அடுத்து காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி, நடிகர் விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, விமல் வாங்கிய தொகையைத் திரும்ப கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தார்.

30 நாட்கள் அவகாசம்
இந்த தீர்ப்பை வழங்கும் போது, நடிகர் விமலும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவருடைய தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதி ஏற்றுக் கொண்டதோடு, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், விமலுக்கு 30 நாள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved