Also Watch
Read this
சேலம் அருகே பல பெண்களிடம் நெருங்கிப்பழகி, அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த தவெக பிரமுகர், நியூஸ் தமிழில் வெளியான செய்தி மூலம் கைதான ஒரே மாதத்தில் மீண்டும் ஒரு பெண் வீட்டுக்கே சென்று எல்லைமீறியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜாமினில் வெளியே வந்த ஐந்தே நாட்களில் அத்துமீறிய தவெக பிரமுகர் மீண்டும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவிடமே சிக்கி உள்ள நிலையில், கம்பிகளுக்கு நடுவில் காக்கிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ எடுத்து மிரட்டல்...
கணவரை பிரிந்து, தனது 2 மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்த 35 வயதான பெண்ணுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால், அவருக்கு உதவி செய்வதுபோல் பேச ஆரம்பித்துள்ளார் நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் மணிகண்டன். அடுத்து அந்த பெண்ணிடம் நெருங்கிப்பழகி தனிமையில் இருந்த மணிகண்டன் அவரை ஆபாசமாக வீடியோ எடுத்ததோடு, வறுமையின் பிடியில் உள்ள பல பெண்களை குறிவைத்து அவர்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்து செல்போன் முழுக்க நிறைத்து வைத்திருந்தார். இதனை எதார்த்தமாக மணிகண்டனின் செல்போனில் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரிடம் பேசுவதையே நிறுத்தியதோடு தனது மொபைல் எண்ணையும் மாற்றி உள்ளார். சில நாட்களுக்குப்பிறகு அந்த பெண்ணின் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து பேசிய மணிகண்டன், தனது நண்பர்களுடன் தனிமையில் இருக்குமாறும், இல்லாவிட்டால் வீடியோக்களை ஷேர் செய்வேன் எனவும்கூறி மிரட்டியதாக தெரிகிறது.

ஜாமினில் வெளியே வந்து...
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கொண்டலாம்பட்டி காவல்துறை ஆபாச வீடியோக்களை டெலிட் செய்து மணிகண்டனை தான் காப்பாற்றியது. இதனால், மனம் உடைந்த அந்த பெண் செய்தியாளர் வினோத்தை தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூற, நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதன்பிறகுதான், மணிகண்டனையே கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். அதோடு, அவரது செல்போன் மற்றும் பென் டிரைவ் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் க்ரைம் பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமே ஆகும் நிலையில், சைபர் க்ரைம் சோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே, கடந்த 5 நாட்களுக்கு முன்பு தவெக பிரமுகர் மணிகண்டன் நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்தார்.

பணத்தை கொடு... இல்லாவிட்டால்...
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? சிறையில் இருந்து வெளியே வந்த 2ஆவது நாளே பள்ளப்பட்டியை சேர்ந்த தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு சென்ற மணிகண்டன், உன்னால் தான் சிறைக்கு சென்றதாகவும், ஜாமினில் வர 40 லட்சம் ரூபாய் வரை செலவாகி விட்டதாகவும் சம்மந்தமே இல்லாமல் அந்த பெண்ணை திட்டியதாகவும் தெரிகிறது. மணிகண்டனிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கி இருந்த அந்த பெண் அதில் 40 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 60 ஆயிரத்தை மட்டுமே கொடுக்க வேண்டி உள்ள நிலையில் 4 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என மிரட்டிய மணிகண்டன், ஒன்று பணத்தை கொடு இல்லாவிட்டால் தனிமையில் இருக்க வேண்டும் என தொடர்ந்து 3 நாட்களாக வீட்டுக்கு வந்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தாலும் மணிகண்டகனை தான் காப்பாற்றுவார்கள் என நினைத்த அந்த பெண் நமது செய்தியாளர் வினோத்துக்கு போன் செய்துள்ளார்.

கதவை அடைத்துக் கொண்டு...
இதையடுத்து, பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த செய்தியாளர் அந்த பெண் வீட்டிற்கே நேரில் சென்றுள்ளார். அப்போது, வினோத்தை பார்த்த மணிகண்டன், தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், உங்களுக்கு என்ன பிரச்சினை எனவும் செய்தியாளரை நோக்கி சினத்தை கக்கினார். இதனிடையே, போலீசாரும் அங்கு வர, அந்த பெண்ணின் வீட்டுக்குள்ளேயே ஓடி சென்று கதவை அடைத்துக்கொண்டார் மணிகண்டன். அதன்பிறகு கதவை உடைக்க காவல்துறை தயாராக, ஒருகட்டத்தில் தானே திறந்துகொண்டு அறையைவிட்டு வெளியே வந்த மணிகண்டன், தனது கையில் இருந்த சிறு துண்டு பேப்பரை சாக்கடையில் கசக்கி வீசி உள்ளார். அதனை எடுத்து பார்த்தபோது, அதில் குறிப்பிட்ட தொகை எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த தொகையை தராவிட்டால் தனிமையில் இருக்குமாறு அந்த பெண்ணுக்கு குடைச்சல் கொடுத்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதனை தொடர்ந்து காவல் வாகனத்தில் ஏறிய மணிகண்டன், தனது ஃபிரண்டு வீட்டுக்குதானே வந்தேன், கொடுத்த பணத்தைகூட கேட்கக்கூடாதா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதம் எடுபடாத நிலையில் மணிகண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் பாலுவையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் வீட்டுக்கே வந்து அந்த பெண்ணை புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.