Also Watch
Read this
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தடியடி சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில், பல்வேறு அரசுக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

அமைச்சர் பதவி விலக கோரி...
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், மாணவர்களின் உயிரை காவு வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் சென்னையில், அரசுக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கண்டன முழக்கம்
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு திரண்ட எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாணவர்கள் கைதை கண்டித்து SFI அமைப்பினர் முழக்கம்
திருவொற்றியூர் அரசுக் கல்லூரி வாசல் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லும்படி மிரட்டிய போலீசார், போராட்டத்திற்கு முன்னின்ற மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது, கேள்வி கேட்ட மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருவொற்றியூர் அரசு கல்லூரி மாணவர்கள் கைதை கண்டித்து, போலீஸ் நிலையம் முன்பு திரண்ட இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து முழக்கமிட்டனர்.

மாநிலக் கல்லூரி வளாகத்தில் கண்டன முழக்கம்
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் முற்போக்கு மாணவர்கள் கழகத்தினர் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, சென்னையில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ததை கண்டித்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, இந்திய மாணவர் சங்கத்தினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SFI அமைப்பினர் குண்டுக்கட்டாக கைது
ஆர்ப்பாட்டத்தில் கூடிய மாணவர்களை பேட்ஜ், பேட்ஜ் ஆக கைது செய்து பேருந்தில் ஏற்றிய போலீசார், அடம்பிடித்த மாணவ - மாணவிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரின் சிலரது சீருடையில் அவர்களது பெயர் பட்டை இல்லாததை கண்டு வெகுண்டெழுந்த மாணவர்கள் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் கைது
தஞ்சையில் நீட்தேர்வுக்கு எதிராக, சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய மாணவர்கள் சங்கத்தினரை கலைந்து செல்லுமாறு போலீஸ் அதிகாரிகள் கெஞ்சியபோதும், அதனை கண்டு கொள்ளாமல் மாணவர்கள் தொடர் முழக்கமிட்டனர். அதன்பின்னர், அந்த மாணவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

போலீஸ் வாகனம் மீது ஏறி கண்டன முழக்கம்
டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். திருச்சி திருவெறும்பூரில் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகைப்படத்தை எரிக்க முயன்றனர். ஒரு சில மாணவர்கள், போலீஸ் வேன் மீது ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி
கோவையில் பேரணி சென்ற இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். நீலகிரி மாவட்டம் கூடலூரில், 48 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

இழுத்துச் சென்று கைது
திருப்பூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட சென்ற SFI மற்றும் DYFI அமைப்பினர், மத்திய கல்வி அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளை சாலையில் தரதரவென இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.

பதாகைகளை ஏந்தி மாணவர்கள் தொடர் முழக்கம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதியில்லை எனக்கூறிய போலீசார், கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.