Also Watch
Read this
நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வினாத்தாள் கசிவுக்கு காரணமானோருக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை விடப்போவதில்லை என்றும், இளைஞர் நலன் மற்றும் அவர்களது எதிர்காலத்தை விட வேறு எதுவும் முக்கியமானதல்ல என்றும், பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

எவரும் தப்பிக்க முடியாது...
இதுகுறித்து, பிரதமர் மோடி, சமூக வலை தள பக்கத்தில் கூறி இருப்பதாவது;
நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் முக்கியமானது. வினாத் தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாம் முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் நான் உத்தரவிட்டு உள்ளேன். இது மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நமது தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

தொடர் போராட்டத்தில்...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியை மேற்கொள்ள முயன்றபோது அதை தடுத்த நிறுத்துகையில் போலீஸார், போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். தடியடியின்போது போராட்டக்காரர்களை தலையில் தாக்கியதாகவும், ஆணியுடன் கூடிய லத்தி, கற்களை பயன்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.