Also Watch
Read this
By: Web Team

புரட்டாசி மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு, கோயில்களில் நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை திரளான பக்தர்கள் கண்டு, தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில், மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ நாளில், நந்தியம் பெருமானை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர்.
தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயிலில், புரட்டாசி மாத சுக்கிர வார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில், சங்கரலிங்க சுவாமி முன்பு வீற்றிருக்கும் நந்திகேஸ்வர பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது

விருதுநகர்: வைத்திய நாதசுவாமி கோயிலில் புரட்டாசி மாத சுக்கிர வார பிரதோஷத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில்
மூலவரான வைத்தியநாதருக்கும் எதிரே அமைந்திருக்கும் நந்தியம் பெருமானுக்கும் அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றன. அப்போது திரண்டிருந்த பக்தர்கள், “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...” என விண்ணதிர முழங்கினர்.

திருவண்ணாமலை: வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயிலில், நந்தி பகவானுக்கு பக்தர்கள் கொண்டு வந்த வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசத்துடன் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஜலகண்டேஸ்வரர் உற்சவர் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோயிலை சுற்றி, மூன்று முறை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு மங்கல மேள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருநள்ளாறு: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருச்சி: முசிறி கற்பூரவல்லி அம்மன் உடனுறை சந்திர மௌலீஸ்வரர் கோயிலில், பிரதோஷ நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு 18 வகை அபிஷேக பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தி பெருமான், சந்திர மௌலீஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தனர்.

ராமநாதபுரம்: திருவாடானை பெரிய கோயிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது சினேகவல்லி அம்பாள்-ஆதி ரத்தினேஸ்வரர் சிவன் கோயிலில், நந்தி பெருமானுக்கு வாசனைப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved