Also Watch
Read this
வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிராகரித்தது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியே தீர வேண்டும் என திட்டவட்டமாக கூறி உள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்து உள்ளார். 26ஆவது நாளாக உண்ணா நோன்பிருக்கும் சோனம் வான்சுக், உடனடியாக போராட்டத்தை முடித்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்தார்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
மாணவர்கள் போராட்டம் காரணமாக, 2ஆவது நாளாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை 16 மெட்ரோ ரயில் நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு அருகே உள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி வீடு, மத்திய செயலகம், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தம், கான் சந்தை, ஜோர் பாக், சிவாஜி அரங்கம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.
துணை ராணுவ படை குவிப்பு
டெல்லியில் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த பதற்றமான சூழ்நிலையில், சிஆர்பிஎப்-ஐ சேர்ந்த 20 கம்பெனி துணை ராணுவ படையினர் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடரும் பதற்றம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர். கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தைக் காவலர்கள் கலைத்தனர். போராட்டக்காரர்களும் காவல்துறை, துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். காவல் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.
கோரிக்கைகள் என்னென்ன?
* நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
* போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது எப்ஐஆர் பதிவு உட்பட எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க கூடாது.
* நீட் வினாத் தாள் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
* சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு அவரிடம் பேச வேண்டும் என்று சிஜேபி கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இணையதள சேவை...
பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய டெல்லி பகுதியில் மட்டும் இணையதள சேவை நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற சாலை, ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி அருகில் உள்ள பகுதிகளில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved