Also Watch
Read this
இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க விடமாட்டேன் எனக்கூறும் பிரதமர் மோடி தான், அவர்களது எதிர்காலத்தை அழித்ததாக ராகுல்காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கல்வி அமைப்பை அழிக்க துணிந்தவர்களை ஊக்குவித்ததற்காக, பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில்...
இதுகுறித்து, ராகுல்காந்தி கூறியதாவது;
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து, அமைதியான வழியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் கல்வி முறை சீரழிந்து விட்டது. பல்வேறு தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளன. இதில், தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவும் இல்லை. தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளால், இளைஞர்கள் எதிர்காலத்தை தொலைக்கின்றனர். நீட் தேர்வு காரணமாக, ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. வினாத்தாள் கசிவு காரணமாக, மறு தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

மாணவர்களின் கோரிக்கைகள்
மாணவர்களின் முக்கிய 3 கோரிக்கைகளை ஏற்றால், போராட்டம் முடிவுக்கு வரும். மத்திய கல்வி அமைச்சராக தோல்வி அடைந்தவரும், ஊழல்வாதி என அறியப்பட்டவருமான தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் மீது கை நீட்டிய ஒவ்வொரு காவலரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் மோடி, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

கல்விமுறையை மாற்ற வேண்டும்
நமது நாட்டின் மிகப்பெரிய சொத்து என்று நினைக்கப்படும் கல்வி முறையானது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் காலத்தில் முற்றிலும் சிதைந்து விட்டது. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் நமது கல்வி முறையை மாற்ற வேண்டும். மாணவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்திய சம்பவத்திற்கு, பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.