Also Watch
Read this
By: Web Team

தங்களைக் கண்டு பயத்தின் உச்சத்தில் திமுக அரசு இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சுமத்தி உள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:
தவெக மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரச்சார பயணம் என்பது, அனைத்துக்கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கை. மற்ற கட்சிகளில், இது போன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த அரசு, தவெக-வின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால், ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். இதன் ஒரு பகுதிதான், திருச்சியில் ஆனந்த் மற்றும் கட்சியினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
இதையும் பாருங்கள்; தவெகவை கண்டு திமுக பயப்படுகிறது.. விஜய் பரபரப்பு அறிக்கை | TVK Vijay Tweet on DMK