Also Watch
Read this
திமுகவில் இருந்து ஒவ்வொரு கூட்டணிக் கட்சியாக விலகும் நிலையில், அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சி
முதலமைச்சர் விஜய் ஆட்சியில் கரெப்ஷன் இல்லை, கமிஷன் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தவெகவை ஆதரிப்பதாக சொன்ன வைகோ, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக கூறி, தமிழக அரசியல் களத்தை அதிர வைத்தார். மதிமுக மட்டுமில்லாமல், கடந்த மார்ச் மாதத்திலேயே வாழ்வுரிமை கட்சி, தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் என்று, ஒவ்வொரு கட்சியாக திமுகவை விட்டு பிரிந்து சென்றுவிட்டன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பலம் கொண்டிருந்த திமுக தற்போது தனித்து விடப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

திமுக தலைவரான ஸ்டாலின்
திமுகவின் தலைவரான கலைஞர் கருணாநிதி இறப்புக்கு பிறகு திமுகவின் அடுத்தகட்ட தலைவராக நின்றவர் மு.க.ஸ்டாலின். தலைவன் இல்லாத கட்சியை அதிமுக போல் சிதற விடாமல் தாங்கிப் பிடித்த மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளையும் விடாமல் தக்கவைத்தார்.

தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடும், தலைமைத்துவத்தோடும் 2021 சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. முதல்வர் பொறுப்பையும் ஏற்றார் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து, தமிழ்நாட்டின் எதிர்காலம் திமுக தான் என கட்சி நிர்வாகிகள் மார்தட்டி கொண்ட நேரத்தில் திடீரென தவெக என்ற கட்சியை தொடங்கி, இரண்டரை ஆண்டுகளில், தமிழ்நாட்டின் அரசியல் அல்காரிதமில் புது மாற்றத்தை உருவாக்கினார் முதலமைச்சர் விஜய்.

வெளியேறிய கட்சிகள்
ஒருபக்கம் தவெக பிரவேசம் இருக்க, இன்னொரு பக்கம் திமுக ஆட்சியில், சட்டமன்றத்திலேயே அதிருப்தியை காட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் தராததை சுட்டிக்காட்டி, மண்டியிடாமல் மானத்தோடு செயல்பட விரும்புவதாக கூறி வெளியேறினார். அப்போது, திமுகவுக்கு இது, பெரியதாக தெரியவில்லை. அடுத்து தேர்தல் முடிவுகள் திமுகவின் அரசியல் வரலாற்றை அப்படியே புரட்டி போட்டது. திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலையில், முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், தோல்வியடைந்தது திமுகவை மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளையும் ஆட்டம் காண வைத்தது.

தவெகவுக்கு ஆதரவு, அமைச்சர் பதவி
மெஜாரிட்டி இல்லாத தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த காங்கிரஸ் முதல் ஆளாக திமுகவில் இருந்து வெளியேறி, தவெக பக்கம் சாய்ந்தது. திமுகவின் முதல் தூண் சரிந்தது. அடுத்ததாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக ஆதரவும் தவெக பக்கம் போக திமுக மௌனமாக வேடிக்கை பார்த்தது. தவெகவுக்கு போனவர்களுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது.
இதற்கிடையே திமுகவின் தோல்விக்கான காரணத்தை கட்சி தொண்டர்கள் முதல், வாக்களித்த மக்கள் வரை கருத்து கேட்டார் மு.க.ஸ்டாலின்.

கூட்டணியே வேண்டாம்...
இனி வரும் காலங்களில், கூட்டணியே வைக்க வேண்டாம் என்ற கருத்தை ஆ.ராசா போன்ற திமுக மூத்த நிர்வாகிகளே பேச ஆரம்பித்தனர். திமுகவால் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியும் என கனிமொழியும் பேசினார். கட்சி நிர்வாகிகள் கூட்டணி வேண்டாம் என்பதை ஆதரிப்பதாக ஆர்.எஸ்.பாரதியும் கூறினார். கூட்டணி கட்சிகளால் துரோகத்தை சந்தித்ததாக, திமுக மூத்த தலைவர் முதல் தொண்டர்கள் வரை புழுங்கி கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியை முறித்து கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

வைகோவும் மாறினார்...
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "இருமொழிக் கொள்கை, இட ஒதுக்கீடு, சமூகநீதி நிலைப்பாடு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தவெகவை ஆதரிக்கிறோம், திமுகவை விட்டு விலகுகிறோம்," என்றார். முதலமைச்சர் விஜய் தன்னை சந்தித்தபோது, எங்களின் ரெண்டு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய முடியுமா? என்று கேட்டார். அப்படி ராஜினாமா செய்தால் பின்னர் நடக்கும் இடைத்தேர்தலில் தானே வந்து பிரச்சாரம் செய்வதாக விஜய் கூறினார்.

ஆனால், பதவியை ராஜினாமா செய்ய அந்த உறுப்பினர்கள் தயாராக இல்லை என வைகோ பேசியபோது, மக்களால் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது தவறு இல்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதில் எந்த தவறும் இல்லை. மக்கள் தவறாக நினைக்க மாட்டார்கள். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதால் மக்கள் வரிப்பணம் வீண் ஆகாது என்ற வைகோ, கடந்த அரசு மக்கள் வரிப்பணத்தை வீணாக்கவில்லையா? என்றும் பதில் கேள்வி எழுப்பினர்.

வைகோ குமுறல்...
தேர்தலில், திமுக எங்களை சரியாக கையாளவில்லை. தேர்தல் கூட்டணியின் போது கண்டிஷன் போட்டு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூட்டணி விலகலுக்கான விளக்கத்தை கொடுத்த வைகோ, கூட்டணி தர்மத்துக்காக திமுகவின் தவறுகளை வெளியே கூறாமல் இருந்து விட்டோம் என்றதோடு, அதே தவறை தவெக செய்தால் சுட்டிக்காட்டுவோம் என்றார்.
தொடர்ந்து 7 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தபோது திமுகவின் தவறுகள் தெரியவில்லையா? என்ற கேள்விக்கு, இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜக உடன் கூட்டணி கொண்ட அதிமுகவை ஆதரித்து ஆட்சி அமைக்க திமுக முடிவெடுத்ததால் அவர்களுடன் எப்படி கூட்டணி தொடர முடியும்? என மறுகேள்வி எழுப்பினார் வைகோ.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும்...
மதிமுகவுக்கு முன்னதாகவே, கடந்த ஜூன் 20ஆம் தேதி திமுக கூட்டணியு உடனான 60 ஆண்டு கால உறவை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் முறித்து கொண்டது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மதிமுக, வாழ்வுரிமை கட்சி என கூட்டணிக் கட்சிகளின் விலகலை சந்தித்துள்ள திமுக தனது கட்சியை வலுப்படுத்துமா? ஜெயலலிதாவை போல் தனித்தே நின்று தங்களது பலத்தை நிரூபிப்பாரா ஸ்டாலின்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே ஒவ்வொரு செங்கல்லாக உருவுவது போல் திமுக கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுக்கும் தவெகவின் அரசியல் நகர்வை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது என்ற பாடத்தை திமுக உணர்ந்தால் நல்லது என்பதே, அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.