Also Watch
Read this
By: Tamil selvi
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் எனக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலை சந்திக்க தயாராக இருக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். ஆட்சி மாற்றம் நடந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பும் தவெக அரசின் டெக்னிக் தற்போது தான் மக்களுக்கு புரிந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

மாற்றுக் கட்சியினர் இணையும் விழா
சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
எம்ஜிஆர் பொருளாளராக இருந்த கட்சி திமுக. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் முதலில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து, தனி கட்சியை கண்டார். அப்போது கூட சட்டமன்றத்தில் கலைஞர் பெயரை குறிப்பிட்டு ஒரு உறுப்பினர் பேசும்போது எம்ஜிஆர் அதை கண்டித்தார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு...
பொதுவாகவே, தேர்தல் முடிவு வந்தால் வெற்றி பெறும் இயக்கத்தை நோக்கி நிறைய பேர் செல்வார்கள். ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவுக்கு தான் பெருவாரியான மக்கள் வந்து இணைகிறார்கள். இது பொறுப்புக்காகவும் பதவிக்காகவும் அல்ல. கொள்கைக்காக வந்து சேர்கின்றனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு...
தற்போது, ஆட்சி மாற்றம் நடைபெற்று உள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தால், ஒரு மாதத்தில் தமிழ்நாடு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் அண்டை மாநிலத்திற்கு செல்கின்றனர். சட்டம் - ஒழுங்கு குறித்து சொல்லவே தேவையில்லை.

பாலியல் கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என டிவி, பேப்பரை பார்த்தால் இதுதான் உள்ளது. இதில், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நபர்களே சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பது தான் வேதனை. ஒரு பக்கம் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு. ஓட்டு போட்டவர்களும், ஓட்டு போடாதவர்களும் சிரமப்பட்டு வருகிறன்றனர். இந்த நேரத்தில் மக்களுக்கு துணையாக திமுக தான் இருக்க வேண்டும்.

எப்போது வேண்டுமானாலும்...
தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மூன்று மாதத்திற்கு பிறகு கூட வரலாம், ஆறு மாதம் கழித்தும் வரலாம். இந்த ஆட்சி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறவில்லை. 108ல் தான் வெற்றி பெற்றார்கள். ஸ்டாலின் தான் வரணும் என்று ஓட்டு போட்டார்கள். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவில் தான் இந்த ஆட்சி ஓடிக் கொண்டு உள்ளது.

இந்த வண்டி எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. எப்போது எங்கு நடந்தாலும், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும். 100% தயாராக இருக்க வேண்டும். திமுக வெற்றிக்கு இந்த நிமிடத்தில் இருந்து உழைக்க தயாராக இருங்கள்.
இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.