Also Watch
Read this
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றும் கூட ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வரும் நிலையில், என்ன முடிவுகள் எடுத்தாலும் கட்டுப்பட வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கட்டளை போட்டிருப்பது கவனிக்க வைத்துள்ளது. திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்று, றெக்கை கட்டி வரும் தகவலை இரு கட்சிகளும் மறுக்காமல் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் அடுத்து நடக்கப் போகும் ஆச்சரியம் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆதரவுக்கு காத்திருக்கு தவெக
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப் பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. தவெக ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், இரு கட்சிகளின் ஆதரவுக்காக தவெக காத்திருக்கிறது.

திமுக எம்எல்ஏக்களுக்கு கட்டளை
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய விஷயங்களும் தகவலாக பொது வெளியில் கசிந்து உள்ளது. 10ஆம் தேதி வரைக்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலின், சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தாலும், கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாக சூசகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம் எனக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், என்ன முடிவுகள் எடுத்தாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் என கட்டளை போட்டதாக சொல்லப்படுகிறது.

முடிவை ஏற்றுக் கொள்வோம்
தவெக ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வரும் நிலையில், தவெக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில் அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அதிமுகவும், திமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அதை மனதில் வைத்து தான் தலைமை என்ன முடிவெடுத்தாலும் எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பட வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவை எடுக்கவில்லை என்றதோடு, ஒரு வேளை அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தால் ஏற்றுக் கொள்வோம் என கூறினார்.

சட்டமன்றகட்சித் தலைவர் யார்?
இன்னொரு பக்கம் புதுச்சேரி ரிசார்ட்டில் வைத்து எம்.எல்.ஏ.க்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என கடிதத்தில் கையெழுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான், சட்டமன்ற கட்சி தலைவர் யார்? என்பதை தேர்ந்தெடுக்காமல் திமுக பொறுமை காத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved